சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று தங்களுடைய இரண்டாவது லீக் ஆட்டத்தில், குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு தயாராகும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சி செய்து வந்தனர்.
அப்போது திடீரென்று தோனி பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது அங்கு இருந்த வீரர்களை ஆச்சரியப்படுத்தியது. உலகின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூட பந்து வீசி இருக்கிறார்.

தோனி பந்துவீச்சில் மிதவேகமான பவுலராக திகழ்வார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் 7 இன்னிங்ஸில் பந்து வீசி இருக்கிறார். இதில் மொத்தமாக 96 பந்துகளை வீசியுள்ள தோனி 67 ரன்களை கொடுத்திருக்கிறார். இதேபோன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் இரண்டு முறை அவர் பந்து வீசி இருக்கிறார். 36 பந்துகளை வீசியுள்ள அவர் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருக்கிறார்.
ஆனால் விக்கெட் கீப்பராக தோனி இருப்பதால் அவரால் அதிக முறை பந்து வீச முடிந்ததில்லை. இந்த நிலையில் தோனி திடீரென்று பந்துவீச்சு பயிற்சியில் ஈடுபட்டது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. இதனால் இன்றைய ஆட்டத்தில் தோனி பௌலிங்கில் ஈடுபடலாம் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அப்படி தோனி பந்து வீசினால் இந்த போட்டியில் விக்கெட் எடுப்பாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
கடந்த போட்டியில் தோனிக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது கேப்டன் பதவியை விட்டு இருப்பதால் தோனி பவுலிங்கில் கவனம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இது தன்னுடைய கடைசி தொடர் என்பதால் தோனி இவ்வாறு ரசிகர்களுக்கு பந்து வீசி ஆச்சரியம் கொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் டி20 கிரிக்கெட் போட்டியில் தோனி பந்து வீசினால் ரன்கள் அதிக செல்லவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் அந்த தவறை தோனி செய்ய மாட்டார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அனைத்திற்குமே தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தோனி இந்த பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.