சென்னை : தோனி கிரிக்கெட்டில் இருந்து ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்று விட்டதாக பலரும் கூறிவரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அது குறித்து தோனி தங்களிடம் என்ன கூறினார் என விளக்கம் அளித்துள்ளது. இதை அடுத்து தோனி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த 2019 ஒருநாள் போட்டி உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார். அதன் பின் ஐபிஎல் தொடரில் மட்டுமே அவர் விளையாடி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுடன் வெளியேறியதால் ஏமாற்றத்தில் இருந்தார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் தனது கடைசி போட்டி நடைபெற வேண்டும் என்ற முடிவில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது.

எனினும், 42 வயதாகி விட்ட நிலையில் அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெற்று விடுவார் எனக் கூறப்பட்டது. ஓய்வு குறித்து தோனி சார்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் அது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதில், "சிஎஸ்கே-வில் யாரிடமும் தோனி தான் ஓய்வு பெறுவதாக கூறவில்லை. அவர் அணி நிர்வாகத்திடம், "இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருங்கள் அதன் பின்பு நான் இறுதி முடிவை கூறுகிறேன்" என்று மட்டும் சொல்லி இருக்கிறார்." என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தகவல் சிஎஸ்கே ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. ஆனால், ஏன் இரண்டு மாதம் காத்திருக்குமாறு கூறினார் என்பதன் பின்னணி குறித்தும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் வீரர் என்ற விதி உள்ளது. அதன்படி 11 வீரர்களை தாண்டி 12 ஆவதாக ஒரு வீரரை பேட்டிங் அல்லது பவுலிங்கின் போது மாற்ற வீரராக எப்போது வேண்டுமானாலும் களமிறக்கலாம்.
இந்த இம்பாக்ட் வீரர் விதியை கைவிட வேண்டும் என ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்கள் பிசிசிஐ-இடம் முறையிட்டுள்ளனர். பிசிசிஐ அதை நீக்குவது குறித்து விவாதித்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் அது குறித்து பிசிசிஐ தனது இறுதி முடிவை அறிவிக்கும். ஒரு வேளை இம்பாக்ட் வீரர் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் பட்சத்தில், தோனி அடுத்த ஆண்டு தொடரில் இம்பாக்ட் வீரராக இடம் பெறுவார் எனக் கூறப்படுகிறது. அதாவது விக்கெட் கீப்பிங் செய்யாமல், பேட்டிங்கின் போது கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால், அப்போது மட்டும் அவர் வந்து பேட்டிங் செய்வார் எனக் கூறப்படுகிறது.