ராஞ்சி : சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி ராமர் கோயிலுக்கு இதுவரை செல்லாமல் உள்ள நிலையில், ராஞ்சியில் உள்ள தியோரி மா கோயிலுக்கு சென்றுள்ளது வட இந்திய ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
42 வயதிலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் எம்எஸ் தோனி. கடைசி முறையாக தோனி சிஎஸ்கே அணிக்காக விளையாடவுள்ள நிலையில், ஜனவரி மாதத்தின் முதல் வாரத்திலேயே பயிற்சியை தொடங்கியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கம் சார்பாக ராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கிரிக்கெட் மைதானத்தில் தோனி பேட்டிங் பயிற்சி செய்து வருகிறார்.

தோனியுடன் சக ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் வீரர்கள் விளையாடி வருகின்றனர். அதேபோல் ராஞ்சி மைதானத்தில் நடக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தோனியை நேரில் சென்று பார்த்து உரையாடி வருகின்றனர். மீண்டும் தனது விண்டேஜ் லுக்கிற்கு மாறியுள்ள தோனி, ஃபிட்னஸிலும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே தோனிக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டும் ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வரவில்லை என்று வட இந்திய ரசிகர்கள் விமர்சித்து வந்தனர். சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு சென்ற நிலையில், தோனி வராதது ஏன் என்று வட இந்திய ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினார்கள். ஆனால் வழக்கம் போல் தோனி யாருக்கும் எந்த பதிலும் அளிக்கவில்லை.
கடவுள் நம்பிக்கை உள்ள தோனி விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட விழாக்களில் பங்கேற்றாலும், ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் நேற்று ராஞ்சியில் புகழ்பெற்ற கோயிலான தியோரி மா கோயிலுக்கு சென்று தோனி வழிபாடு நடத்தியுள்ளார். பக்தர்களுடன் வரிசையில் நின்றபடி தோனி கடவுளிடம் பிரார்த்தனை மேற்கொண்டார்.
அதன்பின் கோயிலில் இருந்து வெளி வந்த போது தோனியை சுற்றி ரசிகர்கள் பலரும் உடன் வந்தனர். அவர்களுக்கு கை கொடுத்து, நன்றி கூறி புறப்பட்டார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டான நிலையில், வட இந்திய ரசிகர்கள் சில ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு வராமல் உள்ளூர் கோயிலுக்கு மட்டும் செல்வது சரியா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.