சென்னை : தோனி வரும் மே 12 அன்று நடைபெற உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் ஓய்வு பெறுவார் என ஒரு தகவல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அது தோனி ரசிகர்களை கலங்க வைக்கும் வகையில் உள்ளது.
2021ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிகழ்ச்சி ஒன்றில் தோனி பேசிய போது தனது ஐபிஎல் ஓய்வு குறித்து முக்கிய விஷயத்தை குறிப்பிட்டார். அப்போது அவர், "நான் எனது கடைசி சர்வதேச போட்டியை எனது சொந்த ஊரான ராஞ்சியில் விளையாடினேன். அதேபோல எனது கடைசி டி20 போட்டியை சென்னையில் விளையாடுவேன் என நம்புகிறேன். அது அடுத்தாண்டோ அல்லது ஐந்தாண்டுகள் கழித்தோ.. அது எனக்கு தெரியாது" எனக் கூறி இருந்தார்.

தற்போது 2024 ஐபிஎல் தொடரில் காலில் தசைநார் கிழிசலுடன் தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவது உறுதி என தெரிகிறது. அந்த வகையில் பார்த்தால் அவர் இந்த ஆண்டு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி போட்டியில் ஆட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது.
அதற்கேற்ப இந்த 2024 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மற்றும் அதற்கு முன் நடக்க உள்ள இரண்டாவது தகுதிப் போட்டி ஆகியவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே -ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, குறைந்தது இரண்டாவது தகுதிப் போட்டியில் ஆடும் வாய்ப்பை பெற்றால் மட்டுமே தோனியால் அவரது விருப்பப்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது கடைசி போட்டியை ஆட முடியும்.
இப்போது உள்ள சூழ்நிலையின்படி பார்த்தால் புள்ளிப் பட்டியலில் ஆறு அணிகள் பிளே ஆஃப் வாய்ப்புக்கு முட்டி மோதி வருகின்றன. கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 16 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடங்களில் உள்ளன. சென்னை, ஹைதராபாத், டெல்லி மற்றும் லக்னோ அணிகள் தலா 12 புள்ளிகளுடன் அடுத்த நான்கு இடங்களில் உள்ளன. இந்த ஆறு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது
சிஎஸ்கே அணி தனது அடுத்த லீக் போட்டியில் குஜராத் அணியை அகமதாபாத் மைதானத்தில் சந்திக்கிறது. அதற்கு அடுத்து மே 12 அன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சந்திக்க உள்ளது. இந்த இரண்டு போட்டிகளில் வென்றால் சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணி பிளே - ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்பது மே 12 அன்று நடக்கும் போட்டியின் முடிவில் தெரிந்து விடும்.
ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் தோனிக்கு அதுவே கடைசி போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்து பெங்களூருவில் நடைபெறும் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் அவர் பங்கேற்க மாட்டார் எனவும், சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய போட்டியுடன் அவர் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவார் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.