சென்னை : 2024 ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற இருக்கும் தோனியின் கடைசி போட்டி ஆசைக்கு வேட்டு வைக்கப் போகிறார் தோனியின் சிஷ்யனான ரிஷப் பண்ட்.
தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை சேப்பாக்கத்தில் விளையாட வேண்டும் என நினைக்கிறார் தோனி. ஒருவேளை சிஎஸ்கே இந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் போனால் அவரது ஆசை நிறைவேறாமல் போய்விடும். லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி போட்டியை பெங்களூரில் ஆட உள்ளது. எனவே லீக் சுற்றுடன் சிஎஸ்கே வெளியேறினால் தோனியால் தனது கடைசி போட்டியை சேப்பாக்கத்தில் விளையாட முடியாது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாவது தகுதிப்போட்டி மற்றும் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே பிளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே அணி முன்னேறினால் மட்டுமே தோனியின் ஆசை நிறைவேறும். அப்போதும் கூட எலிமினேட்டர் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடும்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இப்போதைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மட்டுமே தங்களது பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு கடும் போட்டி நிலவி வருகிறது. மூன்றாவது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இன்னும் ஒரு போட்டியில் வென்று அதிக நெட் ரன் ரேட் பெற்றால் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளும் 12 போட்டிகளில் 6 வெற்றிகள் பெற்று 12 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளன.
எனினும் நெட் ரன் ரேட் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது இடத்திலும் (நெட் ரன் ரேட் - 0.491), டெல்லி அணி ஐந்தாவது இடத்திலும்(நெட் ரன் ரேட் - -0.316), லக்னோ ஆறாவது இடத்திலும் (நெட் ரன் ரேட் - -0.769) உள்ளன.
லக்னோ அணி பலவீனமாக இருப்பதாக கருதப்படுவதால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக விமர்சகர்களால் கூறப்படுகிறது. ஒருவேளை சிஎஸ்கே அணியும், டெல்லி அணியும் தங்களுக்கு மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வென்றால் நெட் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி கேபிடல்ஸ் அணியால் பெரிய வெற்றிகளை பெற்று சிஎஸ்கேவை முந்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும்.
சிஎஸ்கே அணி முன்னணி வேகப் பந்துவீச்சாளர்களை காயத்தால் இழந்து தவித்து வருவதால் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது மிகக் கடினமான விஷயம் தான். அந்த வகையில் பார்த்தால் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி, சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் வாய்ப்பை பறித்து, தோனியின் கடைசி ஐபிஎல் ஆசையை நிறைவேறாமல் செய்ய முடியும்.