சென்னை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசன் வெள்ளிக்கிழமை நாளை மாலை 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆர் சி பி அணியுடன் பல பரிட்சை நடத்துகிறது.
விராட் கோலி இரண்டு மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்புவதால், இந்த போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். அதேபோல் தோனி ஒரு ஆண்டுக்குப் பிறகு மீண்டும் களத்திற்கு திரும்புகிறார்.

அது மட்டும் அல்லாமல் இதுதான் அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்பதால் தோனியை கடைசியாக ஒரு முறை சேப்பாக்கம் மைதானத்தில் பார்த்து விட வேண்டும் என்று ரசிகர்கள் டிக்கெட்டுக்காக அலைந்து வருகிறார்கள். இந்த நிலையில் நாளை தொடங்கும் முதல் போட்டிக்கான டிக்கெட் முற்றிலும் விற்று தீர்ந்து விட்டது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்திற்கு போட்டியை பார்க்க வரும் ரசிகர்களுக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது. அதன்படி சேப்பாக்கம் மைதானத்திற்கு பேருந்தில் வரும் ரசிகர்கள் ஆன்லைன் டிக்கெட்டை நடத்துனரிடம் காண்பித்தால் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை சிஎஸ்கே அணி நிர்வாகம் அரசுக்கு வழங்குகிவிடும்.
அதன்படி சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடைபெறும் போது போட்டி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பும், போட்டி முடிந்து 3 மணி நேரத்திற்கு பின்பும் இந்த சலுகை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. . ஏற்கனவே மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணம் மேற்கொள்ள கடந்த ஆண்டு வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.
இதன் மூலம் மைதானத்திற்கு பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வரும்போது போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் வந்தால் சேப்பாக்கம் மட்டுமல்லாமல் ஒட்டுமொட்ட அண்ணா சாலையும் ஸ்தம்பித்து விடும் என்பதால் இந்த முயற்சி எடுக்கப்பட்டு இருக்கிறது. முதலில் தமிழக அரசு தான் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அதில் உண்மை இல்லை. சிஎஸ்கே அணி பயணத்திற்கான செலவை அரசுக்கு வழங்க உள்ளது.