ஐதராபாத் : ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் சேர்ந்து 500 ரன்கள் குவித்து இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 277 ரன்கள் அடிக்க விட்டது.
இதன் மூலம் பேட்டிங்கில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடி அவர்களால் 246 ரன்கள் மட்டும் தான் எடுக்க முடிந்தது. இந்த நிலையில் ஆட்டம் முடிந்த பிறகு பேசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, வழக்கம் போல் கூலாக பேசுவதாக நினைத்துக் கொண்டு ரசிகர்களை கடுப்பேற்றினார்.

இதில் பேசிய அவர், ஆடுகளம் இன்று பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்தது. ஆனால் 277 என்பது நீங்கள் எவ்வளவு நன்றாக பந்து வீசினாலும், வீசாவிட்டாலும் எதிரணி பேட்டிங் சிறப்பாக விளையாடியிருக்கிறது என்றுதான் அர்த்தம். எங்களுடைய பவுலர்கள் நன்றாக தான் பந்து வீசினார்கள். ஆனால் ஆடுகளம் கடினமாக இருந்தது. 500 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறோம் என்றால் எந்த அளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக ஆடுகளம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
நாங்கள் சில கட்டத்தில் கொஞ்சம் வித்தியாசமாக செயல்பட்டு இருக்கலாம். ஆனால் எங்களுடைய பவுலர்கள் இளம் வீரர்கள். அனுபவம் இல்லாதவர்கள். அவர் நிச்சயம் கற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. இன்று ஆடுகளத்தில் நான் பார்த்ததை நிச்சயமாக ரசிக்கின்றேன். எங்களுடைய பேட்ஸ்மேன்களும் இன்று நன்றாகவே விளையாடினார்கள். திலக் வர்மா, ரோகித் சர்மா, இசான் கிஷன் ஆகியோர் நல்ல தொடக்கத்தை எங்களுக்கு அளித்தார்கள்.
சில விஷயங்களில் மட்டும் நாங்கள் கவனம் செலுத்தி சரியாக செய்ய வேண்டும். அதை செய்தால் நிச்சயம் நாங்கள் அடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று விடுவோம். 17 வயதான தென்னாப்பிரிக்கா வீரர் மாபக்கா அதிக ரன்களை கொடுத்தாலும், நிச்சயம் அவருக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அவர் இளம் வீரர் இதுபோன்ற மைதானங்களில் பார்வையாளர்கள் முன் அவர் விளையாடி இருக்க மாட்டார். அவர் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் நம்பிக்கை குறையாமல் தான் இருக்கின்றார் என்று ஹர்திக் பாண்டியா கூறினார்.