கோவா: சண்டிகர் அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் கோவா அணிக்காக ஆடிவரும் அர்ஜூன் டெண்டுல்கர் அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
ஐபிஎல் ஏலத்தின் போது மும்பை அணி நிர்வாகம் தரப்பில் இளம் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் ஏலத்தில் வாங்கப்பட்ட போது "நெபோட்டிஸம்" என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்டாகியது. அதன்பின் மும்பை அணியின் பெஞ்சில் அர்ஜூன் டெண்டுல்கர் இருந்த போது கூட, சச்சின் டெண்டுல்கரின் பெயருக்காக மும்பை அணி நிர்வாகம் அவரது மகனை ஏலத்தில் வாங்கியதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜூன் டெண்டுல்கர் அறிமுகம் செய்யப்பட்டார். கடந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், மோசமான பவுலர் இல்லை என்ற பெயரெடுத்தார். பவர் பிளே ஓவர்களில் நன்றாக ஸ்விங் செய்யக் கூடிய பவுலர் என்று பலராலும் பாராட்டப்பட்டார்.
இருப்பினும் அர்ஜூன் டெண்டுல்கர் மீதான விமர்சனங்கள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. இந்த நிலையில் எதையும் பற்றியும் கவலைப்படாமல் ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் கோவா அணிக்காக சிறப்பாக விளையாடி சம்பவம் செய்துள்ளார் அர்ஜூன் டெண்டுல்கர். சண்டிகர் அணிக்கு எதிரான போட்டியில் கோவா அணி களமிறங்கியது.
இதில் கோவா அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 267 ரன்கள் சேர்த்திருந்தது. இதன்பின் 2ம் நாளான இன்று கோவா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 618 ரன்கள் குவித்துள்ளது. அந்த அணியின் இளம் வீரரான சுயாஷ் பிரபுதேசாய் 197 ரன்கள் விளாசி, வெறும் 3 ரன்களில் இரட்டை சதத்தை மிஸ் செய்தார்.
அதேபோல் கடைசி வரை களத்தில் இருந்த தீப்ராஜ் கோயங்கர் 115 ரன்கள் சேர்த்தார். மேலும் கடைசி நேரத்தில் வந்த அர்ஜூன் டெண்டுல்கர் அதிரடியாக விளையாடி வெறும் 60 பந்துகளில் 4 சிக்ஸ், 6 ஃபோர்ஸ் உட்பட 70 ரன்களை விளாசினார். பவுலிங்கில் வேகத்தை உயர்த்தியுள்ள அர்ஜூன் டெண்டுல்கர், பேட்டிங்கிலும் முன்னேற்றமடைந்து வருகிறது மும்பை அணி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.