மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணி என்றால் மும்பை இந்தியன்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தான். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ரசிகர்கள் கிடைப்பது என்பது வீரர்களை பொறுத்து இருக்கும்.
இன்னும் சில அணிகளுக்கு இது தங்களுடைய ஊர், தங்களுடைய மாநிலத்தைச் சேர்ந்த அணி என்ற அளவில் ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தோனியின் ரசிகர்களின் பலம் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அணி என்ற ரசிகர்களின் பலம் என இரண்டுமே இருக்கிறது.

மேலும் தமிழ்நாடும் கேரளாவும் இரட்டைச் சகோதரர்கள் போல் என்பதால் பெரும்பாலான கேரள ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். இதேபோன்று ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் விளையாடுவதால் தங்கள் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் இருக்கிறார் என்பதற்காக பலரும் ராஜஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவிப்பது உண்டு. இதன் காரணமாக இரண்டு அணிகளுமே வணிக அளவிலும் வெற்றியை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் பேசிய இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் முரளிதரன், கேரளாவை மையமாக வைத்து ஒரு ஐபிஎல் அணி வரவேண்டும் என்று வலியுறுத்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் கேரளாவில் கிரிக்கெட்டை விட கால்பந்து தான் பிரபலமாக இருக்கிறது. நான் கொச்சி அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடிய போது ஐ எஸ் எல் கால்பந்து தொடரில் உள்ள அணிகளை விட எங்களுக்கு குறைவான ஆதரவே கிடைத்தது.
எனவே கேரளாவை மையமாக வைத்து கிரிக்கெட் அணியை உருவாக்க இங்கே உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு கேரளாவை மையமாக வைத்து ஒரே ஒரு ஆண்டு தான் ஐபிஎல் அணி இருந்தது. தற்போது மேலும் ஒரு அணி ஐபிஎல் தொடரில் கேரளாவை மையமாக வைத்து வந்தால் இந்த மாநிலத்தில் இருந்து நிறைய கிரிக்கெட் வீரர்கள் இன்னும் வருவார்கள்.
அதற்காக இந்த மாநிலத்தில் உள்ள கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் ஐபிஎல் அணிகள் கேரளாவில் இருந்து வரும் என்று கூறியுள்ளார். முரளிதரனின் இந்த கருத்து கேரளாவுக்கு நன்மை அளித்தாலும், அது சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணியின் ரசிகர்களை வெகு அளவில் குறைத்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.