மும்பை : 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் எனது பெயரில் இல்லாததால் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய வீரர் சர்பராஸ் கானின் தம்பி முஷீர் கான் தெரிவித்துள்ளார்.
யு19 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடியவர் முஷீர் கான். 7 போட்டிகளில் விளையாடிய முஷீர் கான், 2 சதங்கள் உட்பட 360 ரன்களை விளாசினார். அதனை தொடர்ந்து மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி தொடரில் அறிமுகமானார் முஷீர் கான். அறிமுக போட்டியிலேயே இரட்டை சதம் விளாசிய இவர், ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.

19 வயதிலேயே ரஞ்சி டிராபி அணியில் இடம்பிடித்து இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டதன் மூலமாக முஷீர் கான் ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளார். இவர் சர்பராஸ் கானின் தம்பி என்பதால், கூடுதல் கவனமும் இவர் மீது குவிந்துள்ளது. இதனிடையே ஐபிஎல் தொடரின் ஏலத்தில் முஷீர் கானை வாங்குவதற்கு எந்த அணியும் முன் வரவில்லை. இதுகுறித்து முஷீர் கான் பேசுகையில், ஐபிஎல் தொடரில் எந்த அணியும் வாங்கவில்லை என்பதால் எந்த ஏமாற்றமும் இல்லை.
எனது தந்தை எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தவும், இந்திய அணிக்காக விளையாடவும் அறிவுறுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் இன்று இல்லை என்றாலும் எதிர்காலத்தில் விளையாடுவேன். அதேபோல் டி20 கிரிக்கெட்டுக்கு தயாராக இன்னும் ஓராண்டு எனக்கு கிடைத்துள்ளது. இந்த காலக்கட்டம் டி20 கிரிக்கெட்டை புரிந்துகொள்ள முயற்சிப்பேன். எனது அண்ணனின் செயல்பாடுகள் தான் எனக்கு எப்போதும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவ்வளவு அர்ப்பணிப்புடன் விளையாடுவார்.
எங்கள் இருவரின் பேட்டிங் ஸ்டைலும் கிட்டத்தட்ட ஒன்று போல் இருக்கும். ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவே, இதனை மற்றொரு போட்டியாக அணுகுமாறு என்னிடம் கூறுவார். ஏனென்றால் வெளியில் இருந்து பார்க்கும் போது, சாதாரண போட்டியாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் அவ்வளவு பிரஷர் இருக்கும். அதேபோல் மும்பை அணிக்காக ரஞ்சி இறுதியில் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது பெருமையளிக்கிறது. ஏனென்றால் ஏராளமான ஜாம்பவான்கள் இங்கு விளையாடி இருக்கிறார்கள். இதற்காக மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.