மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க காத்திருக்கிறார்கள். ஐபிஎல் தொடர் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல இளைஞர்கள் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறார்கள்.
அடுத்த சச்சின் யார் அடுத்த கோலி யார் என்று பலரும் பேசி வந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த தோனி யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தோனியின் இடத்தை ரிங்கு சிங் தான் பிடிப்பார்.

தோனி எவ்வாறு போட்டிகளை வெற்றிகரமாக முடிப்பாரோ அதேபோல் ரிங்கு சிங்கும் இந்திய அணிக்காக வெற்றியை பெற்று தருவார் என்று நம்புகின்றேன். திறமை வாய்ந்த வீரராக இருக்கிறார். மைதானத்தின் அனைத்து பக்கத்திலும் பவுண்டரி அடிக்கக்கூடிய ஷாட்டுகள் அவரிடம் உள்ளது.
தோனியை போல் அமைதியாகவும் பரபரப்பு இன்றி நெருக்கடியான சூழலில் சவால்களை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரம் அவர்தான். இனி இந்திய அணிக்கு ஃபினிஷர் ஆக பல ஆண்டுகள் ஜொலிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இதேபோல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 28 வயது கிரிக்கெட் வீரரான ஷாருக்கான் அபாரமாக விளையாடி வருகிறார். அவருடைய சில ஷாட்டுகளை பார்க்கும்போது எனக்கு பாகிஸ்தான் வீரர் அப்ரிடி நியாபகம் வருகிறது. அப்ரிடி இப்படித்தான் எதிரணி பந்துவீச்சை சிறப்பாக அடித்து நொறுக்குவார். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியை காட்டுவார்.
நிச்சயம் எதிரணி அச்சப்படுவார்கள். அப்படிப்பட்ட ஒரு வீரராக ஷாருக்கானும் இருக்கிறார். ஷாருக்கான் அறிவுபூர்வமாகவும் தொடர்ந்து இதே போல் ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயமாக அவர் வெற்றியாளராக வருவார். இதேபோல் குஜராத் அணியின் பாராட்டப்படாத வீரராக சாய் சுதர்சன் விளங்குகிறார் என்றும் பாராட்டியுள்ளார். ஆர் சி பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷாருக்கான் 30 பந்துகளில் 58 ரன்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள், மூன்று பவுண்டரிகள் அடங்கும். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 193 என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.