மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் உள்ள நிலையில், அவருக்கு என்சிஏ சார்பாக சிறப்பு சிகிச்சைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் உள்ளார். உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் ஹர்திக் பாண்டியா விலகினார். அதன்பின் நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் அடுத்து வரும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் விலகியுள்ளார்.

இதனால் ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் எப்போது இருக்கும் என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியா நேரடியாக ஐபிஎல் தொடரில் தான் களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. இதனால் அதுவரை இந்திய டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என்று பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் என்சிஏ-வில் ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து குணமடைய தொடர்ந்து 18 வாரங்கள் பல்வேறு கட்ட மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த 18 வாரங்களில் கார்டியோ தொடங்கி ஓய்வு வரை என்சிஏ கொடுத்த வழிகாட்டுதலின் படியே ஹர்திக் பாண்டியா சிகிச்சைகளை எடுத்து வருகிறார். நீண்ட நாட்கள் காயமின்றி விளையாடுவதற்காக இம்முறை என்சிஏ தரப்பில் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பும்ரா உள்ளிட்டோர் இதேபோன்ற பயிற்சி முறைகளில் தான் என்சிஏ-வில் பெற்றுள்ளனர். இந்த சிகிச்சை முறையில் ஹர்திக் பாண்டியா பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங், வெஸ்ட் இண்டீஸ் தட்பவெட்ப நிலை உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படும் என்று பார்க்கப்படுகிறது.
18 வாரங்கள் என்ற கணக்கு செய்யப்பட்டுள்ளதால், ஹர்திக் பாண்டியாவின் கம்பேக் மார்ச் மாதம் தான் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கும் சூர்யகுமார் யாதவ் தான் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிய வருகிறது. அதேபோல் ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா கம்பேக் கொடுத்தால், நேரடியாக டி20 உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.