கொல்கத்தா : 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில் இதுவரை ஐபிஎல் தொடரில் நடக்காத ஒரு அதிசய சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியில் ஆடிய இரு அணிகளின் நான்கு துவக்க வீரர்களும் 50 ரன்களுக்கும் மேல் ரன் குவித்தனர்.
இதன் மூலம் 16 வருட ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக ஒரு போட்டியில் பங்கேற்ற இரு அணிகளின் இரண்டு துவக்க வீரர்களும் 50 ரன்களுக்கும் மேல் ரன் குவித்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது. அனந்த அணியின் துவக்க வீரர்கள் பில் சால்ட் மற்றும் சுனில் நரைன் அதிரடி ஆட்டம் ஆடினார்கள். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 138 ரன்கள் குவித்தனர்.

பில் சால்ட் 37 பந்துகளில் 75 ரன்களும், சுனில் நரைன் 32 பந்துகளில் 71 ரன்களும் குவித்தனர். அதன் பின் வந்த வீரர்களும் அதிரடியாக ரன் சேர்த்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 261 ரன்கள் குவித்தது. அடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணி சேஸிங் செய்த போது அந்த அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் மற்றும் ஜானி பேர்ஸ்டோ கொல்கத்தா அணியின் துவக்க இணையை விட ஒரு படி மேலே அதிரடி ஆட்டம் ஆடினர்.
பிரப்சிம்ரன் சிங் 18 பந்துகளில் அரைசதம் கடந்து 54 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற ஜானி பேர்ஸ்டோ 45 பந்துகளில் சதம் கடந்து 108 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி 18.4 ஓவர்களில் எல்லாம் இலக்கை எட்டி வரலாற்று சாதனை படைத்து வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் மிக அதிக ரன்களை சேஸிங் செய்த அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல மிக அதிக சிக்ஸ் அடிக்கப்பட்ட டி20 போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டது. இரண்டு அணிகளும் சேர்ந்து 42 சிக்ஸர்கள் அடித்து இருந்தனர்.