மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பேட்டிற்கும், பந்திற்கும் சரிசமமான போட்டிகள் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்து வந்தது. அதன்படி 200 ரன்களுக்கு மேல் பேட்டிங் செய்யும் அணி அடித்தாலும் அதனை எளிதாக சேசிங் செய்யும் அளவிற்கு போட்டி ஒரு தலை பட்சமாக இருக்கிறது.
இதனை கருத்தில் கொண்டு பேட்டிற்கும் பந்திற்கும் சரிசமமான வாய்ப்பை கொடுக்க வேண்டும் என பிசிசிஐ நிர்வாகிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி வரும் ஐபிஎல் சீசன் முதல் ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்களை அனுமதிக்க பிசிசிஐ ஏற்பாடு செய்திருக்கிறது.

இது பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. இதன் மூலம் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்று பந்துவீச்சாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் இது குறித்து பேசிய ஜெய்தேவ் உனாட்கட், இது சிறிய மாற்றம் தான். ஆனால் பெரிய தாக்கத்தை போட்டியில் ஏற்படுத்தும்.
முன்பெல்லாம் ஒரு பவுன்சருக்கு தான் அனுமதி என்பதால், இரண்டாவது பவுன்சர் போட முடியாது என்பதை உணர்ந்து பேட்ஸ்மேன்கள் அதற்கு ஏற்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த இரண்டு பவுன்சர்கள் வீசும் முறையை பிசிசிஐ சையது முஸ்தாக் அலி தொடரில் நடைமுறைப்படுத்தியது. அது நல்ல மாற்றத்தை கொடுத்திருப்பதால் ஐபிஎல் தொடரிலும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இதனிடையே இம்பேக்ட் பிளேயர் விதி நடைமுறைப்படுத்துவதால் ஆல் ரவுண்டர்களின் முக்கியத்துவம் குறையும் என்று கிரிக்கெட் விமர்சகர்கக் குற்றம் சாட்டியிருந்தனர். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் விதி இருக்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த விதி கண்டிப்பாக இருக்கும் என்றும் இது ஐபிஎல் கிரிக்கெட்டின் வடிவத்தையே மாற்றுகிறது என்றும் பி சி சி ஐ முடிவு எடுத்து இருக்கிறது. இதனால் பல சீனியர் வீரர்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் வீரராக களமிறங்க வாய்ப்பு உள்ளது.