IPL 2024 : துபாயில் ஐபிஎல் தொடரா? பிசிசிஐ முடிவை யாராலும் மாற்ற முடியாது.. ஓபனாக பதில் சொன்ன ஜெய் ஷா
மும்பை : நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக வெளியான தகவல் குறித்து ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி நடக்கும் முதல் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடருக்கான முழுமையான அட்டவணையும் இதுவரை வெளியிடப்படவில்லை.

மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரையிலான போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே பிசிசிஐ தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் இரண்டாம் கட்ட ஐபிஎல் தொடருக்கான அட்டவணை எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு பிசிசிஐ தரப்பில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பின் அடுத்தக்கட்ட போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. அதேபோல் அணி நிர்வாகங்கள் தரப்பில் வீரர்களின் பாஸ்போர்ட் வாங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
கொரோனா பரவலின் போது எப்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டதோ, அதேபோல் இப்போது நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். அதில், ஐபிஎல் தொடர் எந்த காரணத்தை கொண்டு வெளிநாட்டிற்கு மாற்றம் செய்யப்படாது என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடர் முழுமையாக இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்ப ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஏப்ரல் 7ஆம் தேதிக்கு பின் ஐபிஎல் அணிகளுக்கு சிறிய ஓய்வு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications