சென்னை : ஒரு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரருக்கு ஆரஞ்சு நிற தொப்பி வழங்கப்படும். அப்படி ஆரஞ்சு நிற தொப்பியை வென்ற வீரர்கள் வரிசையில் விராட் கோலி மாபெரும் சாதனை ஒன்றை செய்துள்ளார்.
2024 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் துவக்க வீரராக ஆடிய விராட் கோலி. மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தினார். அவர் பதினைந்து போட்டிகளில் 741 ரன்கள் குவித்தார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடங்கும். இதன் மூலம் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்து இருக்கிறார்.

அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட் 583 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். அந்த வகையில் இரண்டாவது இடத்தில் இருந்த ருதுராஜை விட 158 ரன்கள் அதிகமாக எடுத்து இருக்கிறார் விராட் கோலி. அதிக ரன் குவித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பெற்று 2024 ஐபிஎல் தொடருக்கான ஆரஞ்சு நிற தொப்பியை விராட் கோலி வென்றார்.
ஐபிஎல் தொடரில் இரண்டாவது முறையாக விராட் கோலி ஆரஞ்சு நிற தொப்பியை வென்றுள்ளார். முன்னதாக 2016ஆம் ஆண்டு அவர் 973 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்று இருந்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த ஒரு தொடரிலும் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையையும் அப்போது விராட் கோலி செய்தார். அந்த சாதனையை இதுவரை எந்த வீரராலும் முறியடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் விராட் கோலி இரண்டு முறை ஆரஞ்சு நிற தொப்பையை வென்று வேற எந்த இந்திய வீரரும் செய்யாத சாதனையை செய்துள்ளார். இதுவரை வெளிநாட்டு வீரர்களான கிறிஸ் கெயில் மற்றும் டேவிட் வார்னர் மட்டுமே இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட முறை ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளனர்.
தற்போது முதல் முறையாக இந்தியாவின் சார்பில் விராட் கோலி இரண்டு முறை ஆரஞ்சு தொப்பியை வென்று சாதனை படைத்தார். முன்னதாக கிறிஸ் கெயில் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் அதிக ரன் குவித்த வீரராக இருந்தார். அதன் பின் டேவிட் வார்னர் 2015, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை ஆரஞ்சு நிற தொப்பியை வென்று இருந்தார்.