மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது தோல்வியை தழுவியது. குறிப்பாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து ஐந்து முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு சிஎஸ்கேக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

குறிப்பாக பஞ்சாப் அணியின் ஹர்பிரித் பிரார் 4 ஓவர் வீசி 17 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இதன் மூலம் ஆட்ட நாயகன் விருது வென்ற ஹார்பிரித் பேசியபோது, நேற்று பந்து வீசுவதற்கு ஏற்ற ஆடுகளம் அமைந்தது. நானும் ராகுல் சாஹரும் நன்றாக பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்தோம்.
நான் ஐபிஎல் தொடரில் கடந்த ஆறு ஆண்டுகளாக விளையாடி வருகிறேன். இதன் மூலம் என்னுடைய நம்பிக்கையும் உத்வேகமும் அதிகரித்து இருக்கிறது.
தற்போது எல்லாம் தோனி போன்ற ஜாம்பவானுக்கு எதிராக பந்து வீசும் போது நான் சாதாரணமாக தான் உணர்கின்றேன். எனக்கு எந்த பதற்றமும் ஏற்படுவதில்லை.
நான் என்னுடைய பலத்தை நோக்கி பந்து வீசவேண்டும் என்று நினைக்கின்றேன். அதனால் தான் எனக்கு விக்கெட் விழுகிறது என்று நினைக்கின்றேன். நான் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட்டுகள் எடுக்க வேண்டும் என்று செயல்படவே இல்லை. என்னுடைய ஒரே குறிக்கோள் அதிக டாட் பால்களை வீசி நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும் என்பது தான். ஏனென்றால் டாட் பால் வீசும் போது நமக்கு விக்கெட் எடுக்க வாய்ப்பு கிடைக்கும்.
ஆடுகளத்தில் சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினால் நிச்சயம் விக்கெட்டுகள் கிடைக்கும் என்று நிலை இருக்கும்போது, எங்களுடைய நம்பிக்கை தானாக உயரும் என்று ஹர்பிரித் பிரார் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி 10 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் இருக்கிறது. புள்ளி பட்டியலில் தற்போது சிஎஸ்கே சன்ரைசஸ், டெல்லி ஆகிய மூன்று அணிகளும் 10 புள்ளிகளுடன் முறையே 4 ,5 மற்றும் 6வது இடத்தில் உள்ளது.