மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தற்போது யார் கடைசி மூன்று இடங்களை பிடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி அனைத்து ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகியோர் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் ராஜஸ்தான அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டுமென்றால் எஞ்சிய இரண்டு போட்டிகளில் ஒன்றிலாவது குறைந்தபட்சம் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை இரண்டிலும் தோற்றால் அவர்கள் முதல் இரண்டு இடத்தை இழக்க நேரிடும். அதேசமயம் பஞ்சாப் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது. கடைசி இரண்டு போட்டிகள் சம்பிரதாய ஆட்டமாக இருந்தாலும் அந்த அணிக்கு தற்போது மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது.

ஐபிஎல் தொடங்கும் போது ஒவ்வொரு அணியும் பிசிசிஐயிடம் உத்திரவாதம் கேட்டார்கள். அதாவது டி20 உலக கோப்பை நெருங்குவதால் வெளிநாட்டு வீரர்கள் முன்கூட்டியே ஐபிஎல் அணிகளை விட்டு செல்லக்கூடாது என்று கேட்டிருந்தனர். அதற்கு பதில் அளித்த பிசிசிஐ அப்படி நடக்க வாய்ப்பு இல்லை என்றும் அனைத்து வீரர்களும் இருப்பார்கள் என்றும் உறுதியளித்தது.
ஆனால் டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வாரத்திற்கு மேல் உள்ள நிலையில், இங்கிலாந்து அணி வீரர்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புறப்பட்டு சென்று விட்டார்கள். இந்த நிலையில் பஞ்சாப் அணியில் உள்ள ஐந்து வெளிநாட்டு வீரர்கள் மே 19ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தென்னாப்பிரிக்கா வீரர் ரபாடா, இங்கிலாந்து வீரர்கள் சாம் கரன், ஜானி பாரிஸ்டோ, லியாம் லிவிங் ஸ்டோன், கிரிஸ் ஒக்ஸ் ஆகியோர் மே 19ஆம் தேதி விளையாட மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்திய வீரர் ஷிகர் தவானும் காயம் காரணமாக இல்லை.இதனால் பாதி அணிக்கு மேல் பஞ்சாப் அணி வீரர்கள் அணியை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் இருக்கும் வீரர்களை வைத்து விளையாடக்கூடிய நிலைக்கு பஞ்சாப் தள்ளப்பட்டு இருக்கிறது. இதனால் பஞ்சாப் அணி உரிமையாளர்கள் ப்ரீத்தி ஜிந்தா உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.