தர்மசாலா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரஹானே மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை கோபமடைய செய்திருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சிஎஸ்கே பல பரிட்சை நடத்துகிறது.
ஐபிஎல் தொடரில் இதுவரை தொடர்ந்து ஐந்து முறை பஞ்சாப் அணியிடம் சிஎஸ்கே தோல்வியை தழுவி இருக்கிறது. இன்றைய போட்டியில் தோற்றால் இது ஆறாவது முறை ஆகும். இந்த சோகமான சாதனையில் இருந்து சிஎஸ்கே மீள வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இதனால், ரன் குவிப்புக்கு சாதகமான தர்மசாலா மைதானத்தில் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் இன்றைய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 200 ரன்கள் குவித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்று நிலை இருக்கிறது. இந்த சூழலில் ரஹானே தொடர்ந்து நடப்பு சீசனில் தடுமாறி வருகிறார். எனினும் அவரை நீக்க சிஎஸ்கே அணி ஆர்வம் காட்டவில்லை.
தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு தருகிறது. சிஎஸ்கே அணியின் இந்த முடிவால் ரசிகர்கள் ஏற்கனவே கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் முக்கியமான ஆட்டத்தில் கூட ரஹானே ஏழு பந்துகளை எதிர்கொண்டு ஒன்பது ரன்களில் ஆட்டம் இழந்தார். பவர் பிளேவில் போட்டியின் இரண்டாவது ஓவரிலே ரஹானே வெளியேறிருப்பது சிஎஸ்கே அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
தொடர்ந்து ரஹானே சொதப்பி வருவதால் அவரை அணியிலிருந்து நீக்க சிஎஸ்கே அணி மறுப்பது காரணம் என்ன என்று தெரியவில்லை என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
மேலும் ரஹானே தொடர்ந்து இதுபோல் விளையாடி வரும் நிலையில் அவருக்கு சிஎஸ்கே அணி தொடர்ந்து வாய்ப்பு வழங்கினால் கடவுளால் கூட சிஎஸ்கே அணியை காப்பாற்ற முடியாது என்று ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்து வருகிறார்கள்.
ரஹானேவுக்கு பதில் பல இளம் வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிஎஸ்கே ஏன் ரஹானே பின்னாலே தொங்கிக் கொண்டிருக்கிறது ஏன் என்று தெரியவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் சமூக வலைத்தளத்தில் ரஹானேவின் பெயர் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.