தர்மசாலா : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் தோனி முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்சல் பட்டேல் நான்கு ஓவர்கள் வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19வது ஓவரில் தோனி களத்திற்கு வந்தபோது ஹர்சல் பட்டேல் தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் தோனியை கிளீன் போல்ட் ஆக்கினார்.

எனினும் தோனி விக்கெட்டை வீழ்த்திய பிறகு அவர் பெரிய அளவில் கொண்டாடவில்லை. இது குறித்து போட்டி முடிந்த பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த ஹர்சல் பட்டேல், தாம் தோனி மீது பெரிய அளவில் மரியாதை வைத்திருப்பதால் அவரை ஆட்டம் இழக்க செய்தவுடன் கொண்டாடவில்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து பேசிய அவர், ஆடுகளத்தை பார்த்து முதலில் நாங்கள் தவறாக அனுமானம் செய்தோம். இன்றைய ஆடுகளம் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருக்கிறது. ஆடுகளம் மிகவும் தோய்ந்த நிலையில் இருக்கிறது சில பந்துகள் ரிவர்ஸ் ஸ்விங் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறினார்கள். முதலில் யாக்கர் பந்துகளை வீச எனக்கு புதிய நம்பிக்கை இல்லை.
இருப்பினும் என்னுடைய பந்துவீச்சில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றேன். சரியான முறையில் பந்து வீச வேண்டும் என்று உழைத்து வருகின்றேன். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக பந்து வீசுகிறோமோ? அவ்வளவு நாம் முன்னேற்றம் அடைய முடியும். இது தான் என்னுடைய தாரக மந்திரம். நான் இங்கு சிறப்பாக செயல்பட்டதற்கு காரணம் பயிற்சியின் போது நான் கடுமையாக உழைத்தேன். இதை சரியாக செய்தாலே நமக்கு வெற்றி கிடைக்கும் என்று ஹர்சல் பட்டேல் கூறினார்.