தரம்சாலா: 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோத உள்ளன.
இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் அது மற்ற ஒன்பது அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பையும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கும். அந்த ஒன்பது அணிகளுக்கும் புள்ளிப் பட்டியலில் அழுத்தம் ஏற்படும். சிஎஸ்கே வென்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து விடும். அதேசமயம் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தால் அது 9 அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்க வைக்கும். இது எப்படி சாத்தியம்?

தற்போது சிஎஸ்கே அணி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 10 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. அதன் மூலம் 10 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது. புள்ளிப் பட்டியலில் சிஎஸ்கே அணிக்கு கீழே ஆறாவது இடத்தில் உள்ள டெல்லி அணி 11 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. தற்போது சிஎஸ்கே அணி பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தால் டெல்லிக்கு இணையாக 11 போட்டிகளில் 5 வெற்றிகள் மட்டுமே பெற்று 10 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலோ அல்லது ஆறாவது இடத்திலோ சிஎஸ்கே இருக்கும்.
அதன் மூலம் மீதமுள்ள மூன்று போட்டிகளில் டெல்லி அணி சிஎஸ்கே அணியை முந்த வாய்ப்பு கிடைக்கும். இதே போலத்தான் புள்ளிப் பட்டியலில் கீழே இருக்கும் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கும் சிறிய வாய்ப்பு கிடைக்கும். அந்த அணிகள் தங்களுக்கு மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வென்றாலும் கூட 14 புள்ளிகளையே பெற முடியும். சிஎஸ்கே அணி பஞ்சாப் போட்டியில் வென்றால் அந்த அணிகளால் 14 புள்ளிகள் மட்டுமே வைத்துக் கொண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாது என கூறப்படுகிறது.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் 8 வெற்றிகளை பெற்று 16 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி தனக்கு மீதமிருக்கும் நான்கு போட்டிகளில் ஒரு வெற்றியாவது பெற வேண்டும். ஒருவேளை அந்த அணி அடுத்த நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்க நேரிடும். புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் அணிக்கே இந்த அழுத்தம் இருக்கிறது எனும் நிலையில் மற்ற அணிகளுக்கும் இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய அழுத்தம் ஏற்படும்.
இது போன்ற கணக்குகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர்த்து மற்ற ஒன்பது அணிகளின் ரசிகர்களும் சிஎஸ்கே அணி இந்த போட்டியில் தோல்வியடைய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றால் அது சிஎஸ்கே அணிக்கு மட்டுமே நன்மையாக அமையும்.