CSK vs PBKS: தோனிக்காக காத்திருந்தோம்.. இதயமே நொறுங்கிப் போச்சு.. உடைந்து போன ரசிகர்கள்
தரம்சாலா : 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்டிங்கை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருந்தனர்.
சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே மோசமாக விக்கெட்களை இழந்து வந்த சிஎஸ்கே அணி ரன் சேர்க்கத் திணறியது. சிஎஸ்கே அணி நான்கு விக்கெட்கள் இழந்த நிலையில் தோனி எப்போது வருவார்? என அங்கு இருந்த ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் ரன் சேர்த்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் "தோனி, தோனி" என கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். 6 விக்கெட்கள் வீழ்ந்த போதும் தோனி களத்துக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் களத்துக்கு வந்தார். ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்கூர் இணைந்து அணியை மீட்க விரைவாக ரன் சேர்த்து வந்தனர்.
அவர்கள் தொடர்ந்து பவுண்டரி அடித்த போதும் மொத்த மைதானமும், "தோனி, தோனி" என குரல் எழுப்பியது. இந்த நிலையில் ஷர்துல் தாக்கூர் 11 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பவுல்ட் அவுட் ஆனார். அடுத்து பெரும் ஆரவாரத்துக்கு இடையே தோனி களத்துக்கு வந்தார். அப்போது ரசிகர்கள் பெரிய அளவில் உற்சாகமடைந்தனர்.
சரியாக 18.5வது ஓவரில் தோனி களத்துக்கு வந்ததால் எப்படியும் இரண்டு, மூன்று சிக்ஸர்களாவது அடிப்பார் என அங்கிருந்த ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். ஆனால், ஹர்ஷல் பட்டேல் வீசிய அந்த ஓவரில் தான் சந்தித்த முதல் பந்திலேயே தோனி பவுல்டு அவுட் ஆனார். இதை அடுத்து மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மனம் உடைந்து போனார்கள். பெரும் நிசப்தம் நிலவியது.
இந்த ஆண்டு தரம்சாலாவில் சிஎஸ்கே அணி ஆடும் ஒரே ஒரு போட்டி இது என்பதால் அங்கு இருந்த ரசிகர்கள் தோனியை பார்க்க மிகவும் ஆவலாக வந்தனர். ஆனால், அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. தோனி அவுட் ஆகாமல் கடைசி ஓவரில் அதிரடியாக ஆடி இருந்தால் சிஎஸ்கே நிச்சயம் 180 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications