சண்டிகர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற 175 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடியது. பிசிசிஐ சார்பாக புதிதாக திறக்கப்பட்ட முல்லன்பூர் மைதானத்தில் ஆட்டம் நடைபெற்றதால், பிட்ச் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் உடனடியாக ரிஸ்க் தேவையில்லை என்று சேஸிங் செய்வதாக அறிவித்தார்.

கேப்டனாக ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்ததால், டெல்லி அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. அதேபோல் இளம் வீரர் பிரித்வி ஷா இல்லாமல் டெல்லி அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டது. இதனால் டெல்லி அணி சார்பாக டேவிட் வார்னர் - மிட்சல் மார்ஷ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. வழக்கம் போல் மார்ஷ் அதிரடியில் பொளக்க, 3 ஓவர்களில் 33 ரன்களை சேர்த்திருந்தது டெல்லி அணி.
இதன்பின் அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே மார்ஷ் சிக்சர் அடிக்க, அடுத்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அவர் பதிலடி கொடுத்தார். இதன்பின் வந்த ஷாய் ஹோப் நிதானமாக தொடங்க, அதிரடியை டேவிட் வார்னர் கையில் எடுத்து கொண்டார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 54 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து அட்டாக்கில் வந்த ராகுல் சஹர் பந்தில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசி ஹோப்பும் அதிரடிக்கு மாறினார்.
இதன்பின் பஞ்சாப் அணியால் ரூ.11.75 கோடி கொடுத்து வாங்கப்பட்ட ஹர்சல் படேல் அட்டாக்கில் வந்தார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டேவிட் வார்னரை 29 ரன்களில் வீழ்த்தி ஆட்டத்தை பஞ்சாப் அணி பக்கம் திருப்பினார். இதன்பின் ரிஷப் பண்ட் களம் புகுந்ததால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 86 ரன்களை சேர்த்திருந்தது. இதன்பின் ரபாடா பவுலிங்கில் ஹோப் 33 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்சல் படேல் பந்தில் ரிஷப் பண்ட் 18 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து கண்மூடி திறப்பதற்கு ரிக்கி பூய் 3 ரன்களிலும், ஸ்டப்ஸ் 5 ரன்களிலும், அக்சர் படேல் 21 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் டெல்லி அணி இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் போரலை உடனடியாக பேட்டிங் செய்ய அனுப்பியது. தொடர்ந்து நிதானமாக விளையாடியதால் டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் அழைக்கப்பட்டார்.
அந்த ஓவரை டெல்லி அணியின் அபிஷேக் போரல் எதிர் கொண்டார். முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க, 2வது பந்தில் சிக்சர் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். பின்னர் 3 மற்றும் 4 ஆகிய பந்துகளில் பவுண்டரியும், 5வது பந்தில் சிக்சரும் அடிக்க, ஒட்டுமொத்த டெல்லி அணியும் உற்சாகமாகியது. கடைசி பந்தில் அபிஷேக் போரல் ரன் அவுட்டாக, டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்துள்ளது. இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் 10 பந்துகளில் 32 ரன்களை சேர்த்து அசத்தினார். கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் விளாசப்பட்டது.