சண்டிகர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சாம் கரன் மற்றும் லிவிங்ஸ்டன் இருவரின் அபார ஆட்டத்தால் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
ஐபிஎல் தொடரின் 2வது லீக் போட்டியில் டெல்லி அணியை எதிர்த்து பஞ்சாப் அணி களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி சேஸிங் செய்வதாக அறிவித்தது. இதன்பின் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய இம்பேக்ட் பிளேயர் அபிஷேக் போரல் 10 பந்துகளில் 32 ரன்களை விளாசி அசத்தினார்.

இதையடுத்து பஞ்சாப் அணி 175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கியது. பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி ஷிகர் தவான் அதிரடியாக தொடங்கினார். 3 ஓவர்களில் 34 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இஷாந்த் சர்மா பவுலிங்கில் ஷிகர் தவான் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரின் 5வது பந்தில் பேர்ஸ்டோவும் 9 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
இதனால் 42 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. பின்னர் இம்பேக்ட் பிளேயராக பிரப்சிம்ரன் சிங் - சாம் கரன் கூட்டணி இணைந்து பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 6 ஓவர்களிலேயே 60 ரன்கள் குவித்த பஞ்சாப் அணி, அதன்பின் ஓவருக்கு ஒரு பவுண்டரி என்று அதிரடியாக ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பிரப்சிம்ரன் சிங் குல்தீப் யாதவ் பவுலிங்கில் சிக்ஸ் அடிக்க முயன்று 26 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்னொரு பக்கம் சாம் கரன் நிதானமாக ரன்களை சேர்த்தார்.
ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஜித்தேஷ் சர்மா 9 ரன்களில் ஆட்டமிழக்க, சாம் கரன் - லிவிங்ஸ்டன் கூட்டணி இணைந்தது. 14 ஓவர்களை வரை இருவரும் நிதானம் காத்த நிலையில், மிட்சல் மார்ஷ் வீசிய 15வது ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. சிறப்பாக ஆடிய சாம் கரன் 39 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 39 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த சூழலில் மிட்சல் மார்ஷ் வீசிய 18வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸ் உட்பட 18 ரன்கள் சேர்க்கப்பட்டது.
பின்னர் 19வது ஓவரில் சாம் கரன் 47 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த ஷஷாங்க் சிங் டக் அவுட்டாகினார். அந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவையாக இருந்தது. அந்த ஓவரை வீச சுமித் குமார் அழைக்கப்பட்டார். அந்த ஓவரை லிவிங்ஸ்டன் எதிர்கொள்ள, முதல் 2 பந்துகளும் ஒய்டுகளாக வீசப்பட்டது. பின்னர் ஒரு லிவிங்ஸ்டன் அபார சிக்ஸ் அடித்து வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் 19.2 ஓவர்களில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய லிவிங்ஸ்டன் 21 பந்துகளில் 38 ரன்களை விளாசினார்.