முல்லன்பூர் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியுள்ளது. வழக்கமாக மொஹாலியை சொந்த மைதானமாக வைத்து விளையாடி வந்த பஞ்சாப் அணி, இந்த சீசனில் சொந்த மைதானமாக புதிதாக கட்டப்பட்டுள்ள முல்லன்பூர் மைதானத்தை மாற்றியுள்ளது. இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 16 மாதங்களுக்கு பின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ளார். இதனால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். தொடர்ந்து பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்ய போகிறோம். புதிய பிட்ச் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
அதேபோல் புதிய சீசனில் புதிய திட்டங்களுடன் வந்துள்ளோம். சில மாற்றங்களையும் செய்துள்ளோம். இந்த மைதானத்தில் பயிற்சி முகாமில் ஈடுபட்டதால், பிட்ச் நன்றாக பழகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே பயிற்சி போட்டியும் விளையாடி இருக்கிறோம். இந்த மைதானத்தில் எங்களுக்கு லக் இருக்கும் என்ரு நினைக்கிறேன். பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டன், சாம் கரன் மற்றும் ரபாடா ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ரிஷப் பண்ட் பேசுகையில், நாங்கள் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த பிட்ச் கொஞ்சம் ஸ்லோயராக இருக்கும் என்று தெரிகிறது. இந்த தருணம் கொஞ்சம் எமோஷனலாக உள்ளது. இதனை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெரிதாக எதையும் மனதில் வைத்து கொள்ளவில்லை. கடந்த சீசனை பற்றிய கண்டு கொள்ளப் போவதில்லை. நாங்கள் சிறப்பாக தயாராகி இருக்கிறோம். ஷாய் ஹோப், மார்ஷ், வார்னர் மற்றும் ஸ்டப்ஸ் ஆகிய 4 வெளிநாட்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி அணி விவரம் : வார்னர், மிட்சல் மார்ஷ், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட், ரிக்கி பூய், ஸ்டப்ஸ், அக்சர் படேல், சுமித் குமார், குல்தீப் யாதவ், கலீல் அஹ்மத் மற்றும் இஷாந்த் சர்மா
பஞ்சாப் அணி விவரம் : ஷிகர் தவான், பேர்ஸ்டோவ், சாம் கரன், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ஹர்ப்ரீத் பரார், ஹர்சல் படேல், ரபாடா, ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிங், ஷஷாங்க் சிங்