சண்டிகர் : 448 நாட்களுக்கு பின் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியுள்ளார்.
2022ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் நெடுஞ்சாலை விபத்தில் சிக்கினார். இதனால் கடந்த ஐபிஎல் சீசனில் விளையாட முடியாமல் சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பண்ட், என்சிஏவில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் அல்லாமல் நேரடியாக ஐபிஎல் தொடரில் 448 நாட்களுக்கு பின் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய டெல்லி அணி 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்கள் சேர்த்திருந்தது. அப்போது டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களம் புகுந்தார். அவர் களமிறங்கிய போது முல்லன்பூர் மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் ரிஷப் பண்ட் எந்த பதற்றமும் கொள்ளாமல் நிதானம் காட்டினார்.
பின்னர் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வர, ராகுல் சஹரை அட்டாக் செய்தார். ரிஷப் பண்ட் லெக் சைட் திசையில் விளாசிய பந்து பவுண்டரிக்கு செல்ல, பஞ்சாப் ரசிகர்களே எழுந்து நின்று உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து ஹர்சல் படேல் வீசிய அடுத்த ஓவரில் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அசத்தலாக மற்றொரு பவுண்டரியை ரிஷப் பண்ட், கம்பேக் போட்டியில் தரமான சம்பவத்தை ரிஷப் பண்ட் நிகழ்த்த போகிறார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஹர்சல் படேல் ஸ்லோயர் பவுன்சர் ஒன்றை வீச, அதனை கணிக்காமல் ரிஷப் பண்ட் அப்பர் கட் அடிக்கிறேன் என்று பேர்ஸ்டோவின் கைகளிலேயே தூக்கியடித்து கேட்ச் கொடுத்தார். இதனால் ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் டெல்லி அணி திணறி வருகிறது.
ஆனால் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய முடிவு எடுத்து அட்டாக்கிங் ஷாட்களை ஆடியதன் மூலமாக ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்துவிட்டார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் ரிஷப் பண்ட்-ன் சம்பவத்தை நிச்சயம் பார்க்க முடியும். இருப்பினும் தவறான நேரத்தில் சொதப்பலான ஷாட்டை ஆடி ரிஷப் பண்ட் வெளியேறி இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன்ர்.