கொல்கத்தா : கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் கடைசி நேரத்தில் சொந்த காரணங்களால் விலகியது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், ரசிகர்களின் பார்வை ஐபிஎல் தொடர் பக்கம் திரும்பியுள்ளது. 17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் பயிற்சி முகாமில் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த சீசனில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அணிகளில் ஒன்று கேகேஆர்.

ஏனென்றால் கேகேஆர் அணியின் முன்னாள் கவுதம் கம்பீர் மீண்டும் ஆலோசகராக கொண்டு வரப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடந்த சீசனில் இந்திய இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இல்லாமல் கேகேஆர் அணி களமிறங்கியது. இம்முறை ஸ்ரேயாஸ் ஐயரும் கம்பேக் கொடுக்க உள்ளார். இழந்த பெருமையை மீட்கும் பொறுப்பு இருவருக்கும் இருப்பதால், அந்த அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
அதற்கேற்ப ஐபிஎல் ஏலத்திலேயே மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடி கொடுத்து வாங்கியது. இதனால் 2014ஆம் ஆண்டுக்கு பின் 10 ஆண்டுகளாக செய்ய முடியாத சாதனையை, கேகேஆர் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதிக்கும் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் தொடருக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், கேகேஆர் அணி சிக்கலில் சிக்கியுள்ளது.
கேகேஆர் அணியின் அதிரடி தொடக்க வீரரான ஜேசன் ராய் சொந்த காரணங்களால் விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சீசனில் ஷகிப் அல் ஹசனுக்கு மாற்று வீரராக அழைத்து வரப்பட்டவர் ஜேசன் ராய். 8 போட்டிகளில் விளையாடி 285 ரன்களை குவித்ததால், இந்த சீசனில் ஜேசன் ராயை முன்னிலைப்படுத்தப்பட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதனால் அவசர அவசரமாக ஜேசன் ராய்-க்கு பதிலாக இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பில் சால்ட்டை கேகேஆர் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடிய சால்ட், 218 ரன்களை சேர்த்தார். இருப்பினும் அண்மை காலங்களில் சால்டின் அதிரடி ஆட்டம் உச்சத்தில் இருப்பதால், மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக யார் களமிறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.