சென்னை : 2024 ஐபிஎல் தொடர் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் அணியாக முன்னேறி உள்ளது. மொத்தம் நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற உள்ள நிலையில் மற்ற மூன்று அணிகள் எவை? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்னும் பத்து லீக் போட்டிகளே மீதமுள்ள நிலையில் எந்தெந்த அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பு உள்ளது என்ற புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 100 சதவீத வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 97 சதவீதம் வாய்ப்பு உள்ளது. நான்காவது இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி உள்ளது. இந்த மூன்று அணிகளும் 57 சதவீத வெற்றி வாய்ப்பை வைத்துள்ளன. எனவே, இந்த மூன்று அணிகளும் தங்களின் அடுத்த இரு போட்டிகளில் வெற்றி பெறுவதோடு அதிக நெட் ரன் ரேட்டையும் வைத்து இருந்தால் மட்டுமே பிளே-ஆஃப் வாய்ப்பு உறுதியாக கிடைக்கும்.
இன்று நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் செல்லுமா? இல்லையா? என்பது ஓரளவு தெரிந்து விடும். அதே போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 20 சதவீதத்துக்கும் குறைவான வாய்ப்பு உள்ளது. அந்த இரண்டு அணிகளும் தங்களின் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் பெரிய வெற்றிகளை பெற வேண்டும். அதேசமயம் மற்ற அணிகள் தோல்வியடைந்தால் அந்த இரண்டு அணிகளில் ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.
2024 ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வெற்றி வாய்ப்பு கணக்கு -
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 100 சதவீதம்
ராஜஸ்தான் ராயல்ஸ் - 100 சதவீதம்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 96.9 சதவீதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் - 57.8 சதவீதம்
டெல்லி கேப்பிடல்ஸ் - 57.8 சதவீதம்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 56.3 சதவீதம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 20.3 சதவீதம்
குஜராத் டைட்டன்ஸ் - 15.6 சதவீதம்
மும்பை இந்தியன்ஸ் - 0
பஞ்சாப் கிங்ஸ் - 0