சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் முதல் ஆறு போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு வெற்றிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களுக்குள் இருந்தது.
ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது எட்டு போட்டிகளில் நான்கு வெற்றிகளை மட்டும் பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இன்னும் ஆறு போட்டிகள் மீதமிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் பிளே-ஆஃப் செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பத்து அணிகள் பங்கேற்று வரும் நிலையில் குறைந்தது எட்டு போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் புள்ளிகள் அடிப்படையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று வந்தன. ஆனால், இந்த முறை பத்து அணிகளில் மூன்று அணிகள் கிட்டத்தட்ட பிளே-ஆஃப் வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளன. எனவே, ஏழு அணிகளுக்குள் முதல் நான்கு இடங்களை பிடிக்க போட்டி நிலவுகிறது.
அதிலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தாங்கள் ஆடிய ஒன்பது போட்டிகளில் எட்டு வெற்றிகளை பெற்று இப்போதே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் நிலையில் உள்ளது., இன்னும் ஒரு போட்டியில் அந்த அணி வென்றால் கூட பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விடும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் எட்டு போட்டிகளில் தலா ஐந்து வெற்றிகளை பெற்றுள்ளன. அந்த இரண்டு அணிகளிலும் பேட்டிங் பலமாக உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக முறை 200 ரன்களை கடந்த அணிகளாக உள்ளன. அந்த வகையில் அந்த அணிகள் தங்களுக்கு மீதமுள்ள தலா எட்டு போட்டிகளில் மூன்று அல்லது நான்கு வெற்றிகளை பெற அதிக வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்லவும் அதிக வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தான் (8 வெற்றிகள் - 16 புள்ளிகள்), கொல்கத்தா (5 வெற்றிகள் - 10 புள்ளிகள்), ஹைதராபாத் (5 வெற்றிகள் - 10 புள்ளிகள்) அணிகள் பலமாக இருப்பதோடு பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல மிக அதிக வாய்ப்பை தக்க வைத்துள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு நான்கு அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் இந்த மூன்று அணிகள் போக மீதமுள்ள ஒரு இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சிக்கி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் என நான்கு அணிகள் அந்த நான்காவது இடத்தை பிடிக்க கடும் போட்டி போட்டு வருகின்றன. மற்ற மூன்று அணிகளான பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் பிளே-ஆஃப் செல்வது 99 சதவீதம் கடினமான ஒன்று. அதிலும் பெங்களூரு அணி பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பே இல்லை. மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தங்களுக்கு மீதமிருக்கும் ஐந்து போட்டிகளிலும் வென்று நெட் ரன் ரேட் அடிப்படையில் வேண்டுமானால் பிளே-ஆஃப் செல்லலாம். ஆனால், அந்த அணிகள் அடுத்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு மிகக் குறைவு.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆறு போட்டிகள் மீதமுள்ளன. அதில் ஐந்து போட்டிகளில் வென்றால் நெட் உறுதியாக பிளே-ஆஃப் சென்று விட முடியும். சிஎஸ்கே அணிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இரண்டு போட்டிகள் உள்ளது. அதைத் தவிர்த்து ஹைதராபாத், குஜராத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகளுடன் மோத வேண்டும். ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் நல்ல ஃபார்மில் இருக்கும் நிலையில் பஞ்சாப், பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளில் மோசமாக ஆடி இருந்தது. இனி வரும் போட்டிகளிலும் அதே போல ஆடினால் பிளே-ஆஃப் செல்வது கடினமே.