சென்னை : 2024 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றில் இன்னும் ஆறு போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த நிலையில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற வெற்றி சதவீத கணக்கு வெளியாகி உள்ளது.
இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி விட்டன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13 போட்டிகளில் 19 புள்ளிகள் பெற்றும், ராஜஸ்தான் ராயல்ஸ் 12 போட்டிகளில் 16 புள்ளிகள் பெற்றும் தகுதி பெற்றுவிட்டன. இனி வரும் போட்டிகளில் தோற்றாலும் அந்த அணிகளுக்கு கவலை இல்லை.

அடுத்து 14 புள்ளிகளுடன் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீதம் உள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். அந்த அணி அடுத்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது. அந்த இரண்டு அணிகளும் பலவீனமாக இருப்பதால் சன்ரைசர்ஸ் அணிக்கு 92 சதவீத வாய்ப்பு உள்ளது.
அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற 80 சதவீத வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணிக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சிஎஸ்கே அணி ஒருவேளை வெற்றி பெறாவிட்டாலும் கூட 18 ரன்களுக்கும் குறைவான வித்தியாசத்தில் தோல்வி அடைய வேண்டும் அல்லது கடைசி ஓவர் வரை போட்டியை கொண்டு செல்ல வேண்டும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணியை வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு சற்று கடினமாகவே இருக்கும். மற்ற மூன்று அணிகளும் எளிதாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெற்ற நிலையில் சிஎஸ்கே அணி மட்டும் இக்கட்டான நிலையில் உள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளே ஆஃப் செல்ல 25 சதவீத வெற்றி வாய்ப்புள்ளது. முன்பு அந்த அணிக்கு ஒரு சதவீத வெற்றி வாய்ப்பு மட்டுமே இருந்தது. அதில் இருந்து 25 சதவீதம் என்ற அளவுக்கு அந்த அணி உயர்ந்துள்ளது. அதை வைத்து பார்க்கும் போதே பெங்களூரு, சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என தெரிகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 2 சதவீத வாய்ப்பும், லக்னோ அணிக்கு 1 சதவீத வாய்ப்பும் உள்ளது. அந்த இரண்டு அணிகளின் நெட் ரன் ரேட் மிக மோசமாக இருப்பதால் அந்த அணிகள் பிளே ஆஃப் முன்னேற வாய்ப்பு இல்லை. குஜராத், பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் பிளே ஆஃப்க்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டன.