பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன. இந்த நிலையில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவில் எந்த நான்கு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
நேற்று நடந்த போட்டியில் பெங்களூரு அணி 218 ரன்கள் எடுத்த நிலையில், சிஎஸ்கே அணி 191 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது. சென்னை, டெல்லி லக்னோ ஆகிய அணிகளும் 14 புள்ளிகளை பெற்றிருந்தாலும் அந்த அணிகளின் நெட் ரன் ரேட் குறைவாக உள்ளது. பெங்களூரு அணியின் நெட் ரன் ரேட் அதிகமாக இருக்கிறது. அதன் அடிப்படையில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 19 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டது. அதேபோல ராஜஸ்தான் அணி 16 புள்ளிகளுடனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 15 புள்ளிகளுடனும் பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து விட்டன. கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு தலா ஒரு போட்டி மீதம் உள்ளது. அந்தப் போட்டியில் அந்த அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் மாற்றங்கள் இருக்கும்.
மற்றபடி கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இனி கிடையாது. அந்த அணி குறைந்த நெட் ரன் ரேட் வைத்துள்ளதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. நேற்றைய போட்டியில் கூடுதலாக 10 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தால் கூட சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருக்கும். இனி சிஎஸ்கேவுக்கு பிளே ஆஃப் முன்னேற நூலிழை அளவுக்கு கூட வாய்ப்பு இல்லை.