பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் யாரும் எதிர்பாராத வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு வரை அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது மிக மிகக் கடினம் என கருதப்பட்டது.
அந்த அணி முதல் எட்டு போட்டிகளில் ஒரு வெற்றி பெற்று இருந்தது. ஆனால், அடுத்த ஆறு போட்டிகளை வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருந்தது. இந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்பே ஜியோ சினிமா இணையதளத்தில் எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் செல்லும் என்ற கணிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதில் கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களை பிடித்து பிளே ஆஃப் செல்லும் என கணிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன் நான்காவது இடத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த கணிப்பு வெளியிடப்பட்ட போது பெங்களூரு அணி இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாட வேண்டி இருந்தது. ஆனால், அந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூரு அணி வெற்றி பெற்று பிளே ஆஃப் முன்னேறும் என ஜியோ சினிமா இணையதளத்தில் முன்பே கணிக்கப்பட்டு இருந்தது.
அதிலும் சிஎஸ்கே அணியை கடைசிப் போட்டியில் அந்த அணி வீழ்த்தும் எனவும் கணிக்கப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டுள்ளது போலவே தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
இந்த கணிப்பு வெளியிடப்பட்ட நேரத்தில் ராஜஸ்தான், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்பைக் கொண்டிருந்தன. அதற்கடுத்து அதிக வாய்ப்பு கொண்ட நான்காவது அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இருந்தது. ஆனால் அப்போதே ஜியோ சினிமா சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாது என கணித்து இருந்தது. இது எப்படி? என தற்போது பலரும் கேள்விகளுக்கு வருகின்றனர். ஏற்கனவே எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் முன்னேற வேண்டும் என திட்டமிடப்பட்டு அதன்படி தான் ஐபிஎல் தொடர் நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.