மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் யாருமே எதிர்பாராத வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருக்கிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் எடுத்தது.இதை அடுத்து களமிறங்கிய குஜராத் அணி 220 ரன்களில் தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பேட்டிங் செய்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.அக்சர் பட்டேலுடன் ஜோடி சேர்ந்த அவர் நான்காவது விக்கெட்டுக்கு 68 பந்துகளில் 113 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக ரிஷப் பன்ட் 43 பந்துகளை எதிர் கொண்டு 88 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகளும், எட்டு இமாலய சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் டி20 உலக கோப்பையில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் டெல்லி அணி புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்தது. தற்போது குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதால் அவர்கள் தற்போது ஆறாவது இடத்திற்கு வந்திருக்கிறார்கள். 9 போட்டிகளில் விளையாடி நான்கு வெற்றி, ஐந்து தோல்வி என எட்டு புள்ளிகள் உடன் மைனஸ் 0.38 ரன் ரேட் உடன் ஆறாவது இடத்தில் உள்ளனர்.
இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தற்போது புள்ளி பட்டியலில் சரிந்து இருக்கிறது. குஜராத் ஏழாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் எட்டாவது இடத்திலும் உள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் மீண்டும் புள்ளி பட்டியலில் உயர வேண்டும் என்றால் அவர்கள் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
இந்த நிலையில் நான்காவது இடத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, லக்னோ உடன் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவியதால், தற்போது 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்கள். தற்போது டெல்லி அணியும் 8 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் டெல்லி அணிக்கும், சென்னை அணிக்கும் கடும் போட்டி ஏற்பட்டு இருக்கிறது.