சென்னை : 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டங்களை சிஎஸ்கே அணி 6 வெளிநாட்டு வீரர்களுடன் சந்திக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 6 நாட்களில் தொடங்கவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. முதல் போட்டியை வெற்றிகரமாக தொடங்க சிஎஸ்கே அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளிநாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் சிஎஸ்கே பயிற்சி முகாமிற்கு இன்று வந்து சேர்ந்துள்ளனர். இதனால் சிஎஸ்கே அணியின் பயிற்சி அடுத்தடுத்த நாட்களில் கூடுதல் உத்வேகத்துடன் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. தோனியின் கடைசி சீசனாக அறியப்படும் நிலையில், மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் சிஎஸ்கே அணி வீரர்கள் உள்ளனர்.
அதற்கு தேவையான வீரர்கள் சிஎஸ்கே அணியில் இருந்தாலும், 2 வீரர்களின் காயம் அந்த அணிக்கு தலைவலியாக அமைந்துள்ளது. ஏற்கனவே சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வந்த கான்வே, இடதுகை கட்டை விரலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ளதால், 8 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
இதனால் மே முதல் வாரத்திற்கு பின்னரே சிஎஸ்கே அணியுடன் கான்வே இணைவார் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் சிஎஸ்கே அணியின் டெத் பவுலிங் ஸ்பெஷலிஸ்டாக மாறியுள்ள பதிரனாவுக்கும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இவர் மீண்டு வர 5 வாரங்களாகும் என்பதால், முதல் பாதி தொடரில் இருவருமே களமிறங்க வாய்ப்பில்லை என்று நிலை உருவாகியுள்ளது.
இவர்களுக்கான மாற்று வீரர்களை சிஎஸ்கே அணி நிர்வாகம் தேடும் சூழலில் இல்லை. ஏனென்றால் கான்வே மற்றும் பதிரனா இருவருமே சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்கள். பாதி சீசனில் ஆட மாட்டார்கள் என்பதற்காக மாற்று வீரர்களை கொண்டு வரும் திட்டம் சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கு இருந்ததே கிடையாது. இதனால் 6 வெளிநாட்டு வீரர்களுடன் தான் முதல் பாதி சீசனில் சிஎஸ்கே அணி களமிறங்கும் என்று பார்க்கப்படுகிறது.
மொயின் அலி, டேரில் மிட்சல், ரச்சின் ரவீந்திரா, தீக்சனா, சான்ட்னர், முஷ்டாஃபிகுர் ரஹ்மான் ஆகிய 6 பேர் மட்டுமே உள்ளனர். இதில் கான்வே இடத்தில் ரச்சின் ரவீந்திரா களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பதிரனாவுக்கு பதிலாக எந்த வீரரை சிஎஸ்கே அணி களமிறக்கும் என்பதே ரசிகர்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.