தரம்சாலா : ஐபிஎல் வரலாற்றில் எந்த அணியாலும் தொடக் கூட முடியாத பத்து ஆண்டு நீண்ட சாதனை ஒன்றை செய்து இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஆம், தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் பஞ்சாப் கிங்ஸ் படுமோசமான சாதனையை செய்துள்ளது. ஐபிஎல் தொடர் துவங்கப்பட்ட 2008 ஆம் ஆண்டில் அந்த அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருந்தது. அதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கும் அந்த அணி முன்னேறி இருந்தது.

அதன் பின் 2014 ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் முறையாக ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது. அதுவே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அதன் பின் 2015 முதல் 2024 வரை அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. அதன் மூலம் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அணி என்ற மோசமான சாதனையை செய்துள்ளது.
அதிக ஆண்டுகள் தொடர்ந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாத அணிகளின் பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி உள்ளது. அந்த அணி 2013 முதல் 2018 வரை 6 ஆண்டுகளாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது. அதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி 2009 முதல் 2013 வரை தொடர்ந்து ஐந்தாண்டுகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக மொத்தத்தில் 17 ஆண்டுகள் ஐபிஎல் வரலாற்றில் 15 முறை பஞ்சாப் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. இந்த மோசமான சாதனையை இனி எந்த அணியாலும் முறியடிக்கவே முடியாது என்ற நிலையை உள்ளது. மோசமான அணியாக சொல்லப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கூட எட்டு முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.