பெங்களூர் : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணம் குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ஷிகர் தவான் 45 ரன்களும், ஷஷாங்க் சிங் 8 பந்துகளில் 21 ரன்களும் சேர்த்தனர். ஆர்சிபி அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்பின் களமிறங்கிய ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. கடைசி 2 ஓவர்களில் ஆர்சிபி அணி வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல் அசத்தலாக ஆடி ஃபினிஷிங் செய்தார். இதன் மூலமாக ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த நிலையில் பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் பேசுகையில், இந்த போட்டியில் சிறந்த ஒன்றாக அமைந்தது என்றே கூற வேண்டும். நாங்கள் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துள்ளோம். குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் இன்னும் கொஞ்சம் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க வேண்டும். அதேபோல் முதல் ஓவரிலேயே விராட் கோலி போன்ற வீரருக்கு கேட்ச் தவறவிட்டால், அதற்கான விலையை நிச்சயம் கொடுத்தாக வேண்டும். அங்கு தான் ஆட்டம் கொஞ்சம் மாறியது.
அந்த விக்கெட்டை வீழ்த்தி இருந்தால் ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருந்திருக்கும். அதேபோல் பார்ப்பதற்கு நல்ல பேட்டிங் விக்கெட்டாக தெரிந்தாலும், இது அப்படியல்ல. 70 சதவிகிதம் நன்றாக பேட்டிங்கிற்கு சாதகமாக உள்ளது. எனது ஆட்டத்தை நினைத்து மகிழ்ச்சியடைந்தாலும், முதல் 6 ஓவர்களில் நாங்கள் விரைந்து ரன்களை சேர்த்திருக்க வேண்டும். 2 விக்கெட்டுகளை விரைந்து இழந்ததும் எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தது.
ஆனாலும் ஆட்டத்தை நாங்கள் கடைசி ஓவர் வரை எடுத்து வந்துள்ளோம். கடைசி 2 ஓவர்களை கொஞ்சம் கவனமாக வீசியிருக்கலாம். பஞ்சாப் அணியின் இளம் வீரர் ஹர்ப்ரீத் பரார் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். அதிலும் சின்னசாமி மைதானம் போன்ற சிறிய மைதானங்களில் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு சிறப்பாக பவுலிங் செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய கொண்டாட்டம் கபடியில் இருந்து எடுத்து கொண்டது. பஞ்சாப் மாநிலத்தில் பிரபலமானது என்று தெரிவித்துள்ளார்.