சென்னை : ஐபிஎல் தொடரில் தமிழக கிரிக்கெட் வீரரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற் பந்துவீச்சாளருமான அஸ்வின் ஒரு சாதனையை படைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 140 ரன்கள் என்ற இலக்கை தான் நிர்ணயித்தது.
இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்தார். ராஜஸ்தான் வெற்றி பெற வேண்டுமென்றால் சிஎஸ்கே அணியின் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்த வேண்டிய நிலையில் இருந்தது.

இதனால் கேப்டன் சஞ்சு சாம்சன், அஸ்வினை பந்து வீச அழைத்தார். இதன் மூலம் அஸ்வின், ரச்சன் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்தினார். இதேபோன்று பார்மில் இருக்கும் சிவம் துபேவின் விக்கெட்டையும் அஸ்வின் எடுத்தார். இதன் மூலம் நான்கு ஓவர்களில் அஸ்வின் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் சேப்பாக்கம் மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை அஸ்வின் படைத்திருக்கிறார். இதற்கு முன்பு சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ சேப்பாக்கம் மைதானத்தில் 44 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
முன்னாள் சிஎஸ்கே வீரர் அல்பி மார்க்கல் 36 விக்கெட்களும், ஆல்ரவுண்டர் ஜடேஜா சேப்பாக்கம் மைதானத்தில் 34 விக்கெட்களும் சிஎஸ்கே வீரர் தீபக்சாகர் 23 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார்கள். அஸ்வின் ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலத்தில் சென்னை அணிக்காக விளையாட தொடங்கினார். ஆனால் அதன் பிறகு அணி மாறினார்.
ஒருவேளை அஸ்வின் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடி இருந்தால் இந்நேரம் 100 விக்கெட் கூட வீழ்த்தி இருப்பார். இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் ஒரு மைதானத்தில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் சுனில் நரேன் 70 விக்கெட்டுகளையும், மும்பை வான்கடே மைதானத்தில் மலிங்கா 68 விக்கெட்டுகளையும்,டெல்லி பிரோசா கோட்லா மைதானத்தில் அமிர்த் மிஸ்ரா 58 விக்கெட்டுகளையும் மும்பை வான்கடே மைதானத்தில் பும்ரா 52 விக்கெட்டுகளையும், பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் சாஹல் 52 விக்கெட்டுகளையும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அஸ்வின் 50 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்கள்.