லக்னோ : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் தகுதி பெற்றிருக்கிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி ஒரு தோல்வி என பதினாறு புள்ளிகளுடன் அந்த அணி முதல் இடத்தை பிடித்திருக்கிறது.
லக்னோவில் நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மாநிலம் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி பல பரிட்சை நடத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதை அடுத்து களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க வீரர் குயின்டன் டிகாக் 8 ரன்களில் வெளியேற சிஎஸ்கே எதிராக சதம் அடித்த மார்கஸ் ஸ்டோனிஸ் டக்அவுட் ஆகி திரும்பினார். இதனை அடுத்து மூன்றாவது விக்கெட்டுக்கு கே எல் ராகுல் மற்றும் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடியது. கேப்டன் கே எல் ராகுல் இன்று அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்தார்.
இதில் எட்டு பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். தீபக் ஹூடா, தன் பங்கிற்கு 31 பந்துகளில் அரை சதம் எடுத்து பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் 11 ரன்களிலும் ஆயுஸ் பதோனி 18 ரன்களிலும் குருணல் பாண்டியா 15 ரன்களும் எடுக்க லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது.
இதன் அடுத்து 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. வழக்கம் போல் ஜாஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 18 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். ஜெய்ஸ்வால் 18 பந்துகளில் 24 ரன்கள் சேர்க்க, இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்தது. இதன் அடுத்து ரியான் பராக் 14 ரன்களில் வெளியேற நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு, சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினர்.
குறிப்பாக சஞ்சு சாம்சன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 33 பந்துகளை எதிர்கொண்ட அவர் 71 ரன்கள் குவித்தார். இதில் நான்கு சிக்ஸர்களும், 7 பவுண்டரிகளும் அடங்கும். ஜூரல் தன் பங்குக்கு 34 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 19 ஓவர் முடிவிலே மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 199 ரன்களை எடுத்தது. இந்த தோல்வியின் மூலம் லக்னோ அணி புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால் சிஎஸ்கே ஆறாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.