மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான தீபக் சாஹர் தொடர்ந்து காயம் காரணமாக போட்டியிலிருந்து பாதியில் விலகி வருவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது. இதனால் தீபக் சாஹரை அணியை விட்டு நீக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
தீபக் சாஹர் கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் 18 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். இந்த சீசனில் மட்டும் அவர் இரண்டு முறை காயம் அடைந்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி, தீபக் சாஹரை கடுமையாக சாடியிருக்கிறார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், எப்படி உங்களால் அடிக்கடி காயம் அடைய முடிகிறது. நீங்கள் தொடர்ந்து விளையாடுவதும் கிடையாது. ஆனால் அடிக்கடி உங்களுக்கு காயம் ஏற்படுகிறது. உங்களால் தொடர்ந்து ஒரு நான்கு போட்டிகளில் கூட விளையாட முடியவில்லை. நீங்கள் எதற்காக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சி பெறுகிறீர்கள்.
அங்கு சென்று விட்டு மீண்டும் வந்து மூன்று போட்டிகள் விளையாடுகிறீர்கள். திரும்பி என் சி ஏ க்கு செல்கிறீர்கள். இதில் ஏதாவது நியாயம் இருக்கிறதா? முதலில் உங்களுடைய உடல் தகுதியை சரி செய்து கொண்டு பின்னர் பலமான வீரராக வாருங்கள். உங்களுக்கு இப்படி அடிக்கடி காயம் ஏற்படுவதை பார்க்கும் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அணி நிர்வாகத்திற்கும் கடுப்பை ஏற்படுத்தும்.
நிச்சயமாக உங்களைப் பார்த்தாலே கோபம் வருகிறது. காயம் ஏற்படும் தன்மை என்னவென்று எனக்கு தெரியும் ஆனால் நான்கு போட்டிக்கு ஒரு முறை நீங்கள் காலை பிடித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினால் அனைவருக்குமே உங்களை பார்த்து ஏன் இந்த வீரர் இப்படி செய்கிறார். அவர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது. அவர்கள் உடல் நிலையில் என்ன சிக்கல் இருக்கிறது என்று யோசிக்க தான் தோன்றும்.
அது மட்டுமல்லாமல் பல வீரர்கள் ஒரு ஆண்டுக்கு ஐபிஎல் தவிர வேறு எந்த போட்டியிலும் பங்கேற்பதில்லை. வெறும் நான்கு ஓவர் தான். மூன்று மணி நேரம் அதிலே போட்டி முடிவடைந்து விடுகிறது. ஆனால் இதை கூட உங்களால் தொடர்ந்து செய்ய முடியவில்லை என்றால் நீங்கள் விளையாடுவதற்கு தகுதியற்றவர்கள் ஆக தான் கருதப்படுவீர்கள் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.