பெங்களூரு : 2024 ஐபிஎல் தொடரில் தனது கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சிஎஸ்கே அணி தொடரில் இருந்தே வெளியேறியது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடரில் அதிக அனுபவம் கொண்ட பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷர்துல் தாக்குர் தான்.
இந்த போட்டியில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்த போது முதல் மூன்று ஓவர்களில் அந்த அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின் சிறிது நேரம் மழையால் போட்டி தடைபட்டது. மழைக்குப்பின் அடுத்த மூன்று ஓவர்களில் பெங்களூரு அணியால் ரன் குவிக்க முடியவில்லை. வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அப்போது இந்தப் போட்டியில் அதிக ரன் குவிப்பது சாத்தியமில்லை என்றே அனைவரும் கருதினர். அதற்கு ஏற்ப சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் தீக்ஷனா மற்றும் மிட்செல் சான்ட்னர் கட்டுக்கோப்பாக பந்து வீசினர். ஆனால் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன்களை வாரி இறைத்தனர்.
இத்தனைக்கும் ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணியின் அதிக அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர். ஆனால், அவரால் சரியான லைன் மற்றும் லென்த்தில் பந்து வீச முடியவில்லை. மழைக்குப் பின் பிட்ச் மந்தமாக மாறி இருந்த நிலையில் வேகத்தை குறைத்து மெதுவாக பந்து வீசிய சான்ட்னர் மற்றும் தீக்ஷனா ரன்களை கட்டுப்படுத்தினர். ஆனால் ஜடேஜா சற்று அதிக வேகத்தில் பந்து வீசினார்.
அதே போல ஷர்துல் தாக்குர் வேகப் பந்துவீச்சாளர் என்றாலும் மித வேகத்தில் பந்து வீசி இருந்தால் நிச்சயம் பெங்களூர் அணி திணறி இருக்கும். ஆனால், ஷர்துல் தாக்குர் அதை செய்யவில்லை. அவர் 4 ஓவர்கள் பந்து வீசி 61 ரன்கள் கொடுத்து இரண்டு விக்கெட் வீழ்த்தி இருந்தார். ஜடேஜா 3 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து இருந்தார்.
அதே சமயம் தீக்ஷனா 4 ஓவர்களில் 25 ரன்களும், மிட்செல் சான்ட்னர் 4 ஓவர்களில் 23 ரன்களும் மட்டுமே விட்டு கொடுத்து இருந்தனர். இதை அடுத்து பெங்களூரு அணி 20 ஓவர்களில் 218 ரன்கள் எடுத்தது. இவர்கள் இருவரும் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்ததாலேயே பெங்களூரு அணியால் இத்தனை ரன்கள் குவிக்க முடிந்தது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்காவது முன்னேறி இருக்கும். ஆனால் 191 ரன்கள் மட்டுமே எடுத்து 10 ரன்கள் வித்தியாசத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது.