பெங்களூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தற்போது ஆர் சி பி அணி மிகவும் சோகமான நிலையில் இருக்கிறது. நடப்பு சீசனில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஆறு தோல்வி என இரண்டு புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.
ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்வது மிகவும் கடினமான விஷயமாக தற்போது பார்க்கப்படுகிறது. கோலி, டுபிளசிஸ், மேக்ஸ்வெல் உள்ளிட்ட ஸ்டார் வீரர்கள் இருந்தும் அந்த அணி மோசமான பந்துவீச்சு காரணமாக தோல்வியை தழுவி வருகிறது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆர்சிபி அணி எப்போதுமே ஒரு அதிர்ஷ்டம் இல்லாத அணியாக தான் பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கு வருவதற்கு முன்பு சூப்பராக விளையாடி வந்த மேக்ஸ்வெல் அந்த அணிக்காக விளையாடும்போது தடுமாறி வருகிறார்.
கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மேக்ஸ்வெல் 17 டி20 போட்டிகளில் விளையாடி 552 ரன்கள் அடித்திருந்தார். இதில் சராசரி 42.5 ஆகும். இதில் இரண்டு சதமும் அடங்கும். ஆனால் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடிய மேக்ஸ்வெல் 6 போட்டிகளில் விளையாடி 32 ரன்கள் தான் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி வெறும் 5.3 என்ற அளவில் மோசமான வகையில் இருக்கிறது.
இந்த நிலையில் தான் மோசமாக விளையாடி வருவதால் அணியிலிருந்து விலகிக் கொள்வதாகவும், தம்மை பிளேயிங் லெவனில் சேர்க்காமல் வேறு ஒரு வீரருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மேக்ஸ்வெல் வெளிப்படையாக பயிற்சாளரிடம் கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள மேக்ஸ்வெல், அது உண்மைதான்.
நான் தான் கேப்டனிடமும் பயிற்சியாளரிடமும் என்னை விடுவிக்க கூறினேன்.
நான் இந்த தொடரில் தடுமாறி வருகின்றேன். இதனால் நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனவே கொஞ்சம் ஓய்வு எனக்கு தேவைப்படுகிறது. இதனால் எனக்கு வழங்கப்படும் வாய்ப்பை வேறு ஒரு வீரருக்கு வழங்குங்கள் என்று கூறி இருக்கின்றேன். தற்போது சிறிய பிரேக் எடுத்து இருக்கிறேன்.
அதில் என்னுடைய உடலும் மனதும் மீண்டு வரும் என்று நம்புகிறேன். அப்போது ஆர் சி பி அணிக்கு என்னுடைய உதவி தேவைப்பட்டால், நிச்சயம் நான் திரும்பி விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் கூறி இருக்கிறார். ஆர் சி பி அணி தடுமாறி வரும் நிலையில் மேக்ஸ்வெல் கம்பி நீட்டி இருப்பது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.