மும்பை : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் மற்ற அணிகளை மிரட்டும் தாதா போல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளங்கி வருகிறது. மிரட்டலான பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் சன்ரைசர்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 260 ரன்களுக்கு மேல் இரண்டு முறை அடித்து அசத்தியிருக்கிறது.
இதனால் சன்ரைசர்ஸ் அணியை பார்த்தாலே மற்ற அணிகள் பயந்து மிரண்டு போய் இருக்கிறார்கள். ஆனால் பலம் வாய்ந்த ஆர்சிபி அணி, இந்த சீசனில் கத்துக்குட்டி அணி போல் மோசமாக விளையாடி வருகிறது.

எப்படி வீர வசனம் பேசிக்கொண்டு நிஜ ரவுடிகளிடம் அடி வாங்கும் நாய் சேகர் போல் ஆர்சிபி அணி இந்த சீசனில் இருந்தது. இதனால் ஹைதராபாத்தில் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்று அனைவரும் எதிர்பார்த்தது. ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை ஆர் சி பி அணி பெற்று இருக்கிறது.
எப்படி அசுரபலம் கொண்ட முத்துப்பாண்டியை சாதாரண கபடி வீரரான சரவண வேலு அடித்து நகத்தினாரோ, அது போல் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி படை சன்ரைசர்ஸ் படையை அதன் கோட்டைக்குள்ளே சென்று தட்டித் தூக்கி இருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை குவித்தது. இதில் தொடக்க வீரராக களம் இறங்கிய விராட் கோலி 43 பந்துகளில் 51 ரன்களும், கேப்டன் டுபிளசிஸ் 12 பந்துகளில் 25 ரன்களும் எடுத்தனர்.
எனினும் இறுதியில் ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 5 சிக்சர் இரண்டு பவுண்டரி என 20 பந்துகளில் அரை சதம் கடந்தார். இந்த நிலையில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய எஸ் ஆர் ஹெச் அணியில் ட்ராவிஸ் ஹெட் ஒரு ரன்னிலும் ஏய்டன் மார்க்கிரம் ஏழு ரன்களிலும் அடுத்தடுத்த ஆட்டம் இழக்க நிஷாத்குமார் ரெட்டி 13 ரன்களில் வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசன் இன்றைய ஆட்டத்தில் 7 ரன்கள் உடன் நடையை கட்டினார் மற்றும் தொடக்க வீரர் அபிஷேக்சர்மாவும் அதிரடியாக ஆட முற்பட்டு 13 பந்துகளில் 31 ரன்களில் யாஷ் தாக்கூர் பந்து வீச்சில் வெளியேறினார். இதனால் சன்ரைசர்ஸ் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.