ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர் சி பி அணி விராட் கோலி ,டிவில்லியர்ஸ், போன்ற ஸ்டார் வீரர்கள் பலர் இருந்தும் ஒருமுறை கூட ஐபிஎல் பட்டத்தை வாங்கியதில்லை. இதற்கு காரணம் rcb-யின் தவறான கொள்கைதான் என்று ரசிகர்கள் பலரும் கிண்டல் அடித்து வருவார்கள்.
இந்த நிலையில் இன்றைய மினி ஏலத்தில் பங்கேற்பதற்காக ஆர் சி பி அணி தங்களிடம் இருந்த வேகப்பந்துவீச்சாளர்கள் பலரை வெளியே அனுப்பி புதிய வேகப்பந்துவீச்சாளர்களை வாங்குவதற்காக தயாராக இருந்தது.

ஆர் சி பி யிடம் 23 கோடியே 25 லட்சம் ரூபாய் கையிருப்பு தொகை இருந்தது. இந்தத் தொகையை வைத்துக்கொண்டு நல்ல வீரர்களை ஆர் சி பி வாங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் வழக்கம் போல பிங்கிலிக்கு பியாபி என்று ஆர்சிபி தன்னுடைய வேலையை காட்டியது. பெங்களூர் மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. இதனால் சிறப்பான வீரர்களே அங்கு அடி வாங்குவார்கள்.
இந்த நிலையில் ஆர் சி பி மினி ஏலத்தில் ஒரு ஓவருக்கு ஐந்து சிக்ஸர்களை வழங்கிய யாஷ் தயால் என்ற வேகப்பந்துவீச்சாளரை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அதுவும் யாஷ் தயாலின் அடிப்படை விலையை வெறும் ₹20 லட்சம் ரூபாயாக தான் இருந்தது. ஆனால் குஜராத்தும், ஆர்சிபியும் போட்டி போட்டுக் கொண்டு இந்த வீரரை 5 கோடி வரை கொடுத்து ஆர் சி பி வாங்கி இருக்கிறது.
இதனை ரசிகர்கள் கிண்டல் செய்திருக்கிறார்கள். கடந்த சீசனில் அவர் தொடர்ந்து 5 சிக்சர் கொடுத்ததால் ஒரு சிக்ஸருக்கு ஒரு கோடி என்ற பணத்தை ஆர் சி பி அணி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்திருக்கிறார்கள். இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்சாரி ஜோசப் என்ற வீரரை ஆர் சி பி அணி 11 கோடியே 50 லட்சம் ரூபாய் கொடுத்து இருக்கிறது.
அல்சாரி ஜோசப் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் நன்றாக விளையாடினாலும் அவர் அதிக ரன்களை கொடுக்கக் கூடிய வீரராக திகழ்ந்தார். இதன் காரணமாகத்தான் ஏற்கனவே பல அணிகள் அவரை கழற்றிவிட்டது. தற்போது ஆர் சி பி அவரை நம்பி வாங்கி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கைய குடுங்க சார் இனிமே ஐபிஎல்லில் உங்களால் சாம்பியன் பட்டத்தையே வாங்க முடியாது என்று சொல்லி கிண்டல் அடித்து வருகிறார்கள்.