பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2024 ஆம் ஆண்டு சீசனில் ஆர் சி பி அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் தோல்வியை தழுவி ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றி பெற்றிருக்கிறது. மகளிர் ஆர் சி பி அணி WPL கோப்பையை வென்ற நிலையில் ஆடவர் அணி ஐபிஎல் தொடரில் சாதிக்கும் என்ற ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் வழக்கம்போல் பழைய கதையே ஆர்சிபி அணியில் தொடர்கிறது. பேட்டிங், பந்துவீச்சு பில்டிங் என மூன்று பிரிவிலும் ஆர்சிபி அணி பல தவறுகளை செய்ததன் காரணமாக லக்னோ அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது.

இந்த நிலையில் சோகமான முகத்துடன் தோல்வி குறித்து பேசிய டுபிளசிஸ் இன்றைய ஆட்டத்தில் தாங்கள் பல தவறுகளை செய்தோம் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய அவர் குயின்டன் டி காக் , நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்களின் கேட்சுகளை தவறவிடுவது என்பது ஆட்டத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற தவறுகள் நிச்சயம் தோல்வியையே கொடுக்கும்.
இன்றைய ஆட்டத்தில் எங்களுடைய பந்துவீச்சு மிகவும் மோசமாக அமைந்தது. பவர் பிளேவில் நாங்கள் பல தவறுகளை செய்தோம். லக்னோ அணி வீரர்களுக்கு நாங்கள் பல பவுண்டரிகளை எளிதாக வழங்கி விட்டோம். எனினும் கடைசி கட்டத்தில் நாங்கள் நன்றாக பந்து வீசினோம் என்று நினைக்கின்றேன். இதன் மூலம் ஆட்டத்தில் நாங்கள் மீண்டு வந்தோம்.
ஆனால் பேட்டிங்கில் டி20 போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் உங்களுக்கு பார்ட்னர்ஷிப் மிகவும் அவசியம். நாங்கள் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் அது நடைபெறவே இல்லை. அது நிச்சயம் ஏமாற்றத்தை கொடுக்கிறது. எங்கள் அணியில் தங்களுடைய போராட்ட குணத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு கை கொடுக்க வேண்டும்.
மாயங் யாதவின் பந்துவீச்சு அபாரமாக இருக்கிறது. குறிப்பாக அவர் பந்தை வேகமாக வீசினாலும், கட்டுக்கோப்பாக செயல்படுகிறார். அவருடைய பந்துவீச்சை நாங்கள் இதுவரை கண்டதில்லை என்பதால் அவரை எதிர்கொள்வது சிரமமாக இருந்தது. வேகம் மட்டும் இல்லை. பந்தை நினைத்த இடத்தில் சரியாக வீசும் அந்த திறனும் பிரமிக்க வைக்கிறது என்று டுபிளசிஸ் கூறினார்.