மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை ஆர்சிபி அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. இதற்காக ஆர் சி பி அணி பல முயற்சிகளை எடுத்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் அவர்களால் ஐபிஎல் கோப்பையை கைப்பற்ற முடியாமல் தடுமாறி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆர் சி பி அணி ஏலத்தில் அனுபவம் குன்றிய பவுலர்களை போட்டி போட்டு எடுத்ததாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஆர் சி பி மீது நம்பிக்கை இல்லை என்று பலரும் கூறிவரும் நிலையில் தங்களை அப்படி நினைக்க வேண்டாம் என்பது போல் ஆர் சி பி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் ஆர் சி பி அணியின் திட்டம் குறித்து அவர் பேசியிருக்கிறார். எங்களுடைய மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானதாக இருக்கும். இதனால் நாங்கள் பேட்டிங்கை நன்றாக பலமாக்கி இருக்கிறோம். இதன் மூலம் எவ்வளவு இலக்கை நிர்ணயித்தாலும், அதனை எளிதாக சேஸ் செய்யும் அளவுக்கு பேட்டிங்கை மாற்றி இருக்கிறோம்.
இதேபோன்று நாங்கள் முதலில் பேட்டிங் செய்யும்போது பெரிய இலக்கை நிர்ணயித்து பவுலர்களுக்கு உதவும் வகையில் திட்டத்தை மாற்றி அமைத்து இருக்கிறோம். தற்போது நாங்கள் கேம்ரான் கிரீனை அணியில் சேர்த்து இருப்பதால் எங்கள் அணியின் நடுவரிசை பலமாக மாறி இருக்கிறது. மேக்ஸ்வெல் நான்காவது இடத்திலும்,கேமரூன் கிரீன் ஐந்தாவது இடத்திலும் களம் இறக்கினால் அது எங்களுக்கு பலத்தை கொடுக்கும்.
இதேபோன்று தினேஷ் கார்த்திக் நம்பர் ஆறாவது இடத்தில் இருக்கிறார். டாப் 3 வீரர்கள் பேட்டிங் வரிசையில் டுபிளசிஸ், விராட் கோலி, ரஜத் பட்டிதார் இருக்கிறார்கள். எனவே எங்களுடைய பேட்டிங்கில் முதல் ஆறு இடங்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டு விட்டது. பந்துவீச்சை பொறுத்தவரை முகமது சிராஜ் தான் எங்கள் அணியின் லீடராக இருப்பார். பாட் கம்மின்சை நாங்கள் எடுத்துவிடலாம் என நினைத்தோம்.
ஆனால் அது எங்களால் முடியவில்லை. அதற்கு மாற்றாக அல்சாரி ஜோசப்பை எடுத்து இருக்கிறோம். அவரும் ஒரு நல்ல பவுலர் தான். அவருடன் நான் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இதேபோன்று யாஷ் தயாலிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர் புது பந்தை நன்றாக பயன்படுத்தி விக்கெட் எடுப்பார். எனினும் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் தான் அவர் கொஞ்சம் தடுமாறுகிறார். அதையும் நாங்கள் சரி செய்து விடுவோம் என்று பயிற்சியாளர் ஆன்டிபிளவர் கூறியுள்ளார்.