பெங்களூரு: இளம் வயதிலேயே எனது திறமையை அறிந்து ஆர்சிபி அணி நிர்வாகம் வாய்ப்பளித்ததாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் முன்னிலையில் இருக்கிறார் கேஎல் ராகுல். ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட அவர், ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியின் போது காலில் காயமடைந்து வெளியேறினார். இதன்பின் கிரிக்கெட்டில் இருந்து விலகி, அறுவை சிகிச்சை செய்து 5 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருந்தார். பின்னர் நேரடியாக ஆசியக் கோப்பையில் களமிறங்கிய அவர், பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் விளாசி அசத்தினார்.

அதன்பின் கேஎல் ராகுல் இந்திய அணியில் மிகமுக்கியமான வீரராக மாறினார். இந்திய அணியின் மிடில் ஆர்டர் கேஎல் ராகுலை சுற்றி கட்டமைக்கப்பட்டது. ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்க கூடிய வீரராக கேஎல் ராகுல் உருவெடுத்து அசத்தியதோடு, உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே இந்திய அணியை வழிநடத்தி வெற்றிபெற வைத்தார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக கேப்டன்சி மேற்கொண்டதால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
சிறந்த ஃபார்மில் இருக்கும் கேஎல் ராகுல், அடுத்ததாக டெஸ்ட் தொடரிலும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த முறை தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முழுக்க முழுக்க தோல்வியை சந்தித்த கேஎல் ராகுல், இம்முறை பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார். அதேகேற்ப கேப்டன்சி, டிஆர்எஸ், பேட்டிங் ஃபார்ம், குழப்பமில்லாத மனநிலை இன்றி தெளிவுடன் இருக்கிறார். இதனால் கேஎல் ராகுல் விரைவில் இந்திய அணியின் முகமாக மாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் கேஎல் ராகுல், ஆர்சிபி அணியில் விளையாடிய நினைவுகளை பகிர்ந்துள்ளார். கேஎல் ராகுல் பேசுகையில், 2013ஆம் ஆண்டில் இருந்து அடுத்த 3 ஆண்டுகள் ஆர்சிபி அணிக்காக விளையாடி இருக்கிறேன். இளம் வயதிலேயே என் திறமையை வெளிப்படுத்த ஆர்சிபி அணி நிர்வாகம் எனக்கு வாய்ப்பை அளித்தது. நான் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவன் என்பதால், ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட போதே ஆர்சிபி அணிக்காக விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அதன்பின் என் ஆசைபடியே ஆர்சிபி அணிக்காக விளையாடியது எனது அதிர்ஷ்டம். ஆர்சிபி அணியில் இருந்து இப்போது விலகினாலும், எப்போதும் மனதளவில் நெருக்கமான அணி என்று தெரிவித்துள்ளார். ஆர்சிபி அணிக்கு ஆடியதன் மூலமாகவே கேஎல் ராகுலுக்கு இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.