சிட்னி : ஐபிஎல் மினி ஏலத்தில் இங்கிலாந்து வீரர் டாம் கரணை ஆர்சிபி அணி ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியை எப்போதுமே ரசிகர்கள் ராசி இல்லாத அணி என்று விமர்சித்து வருவார்கள்.
ஏனென்றால் விராட் கோலி, கெயில் டிவில்லியர்ஸ் ஆகியோர்களை தவிர இந்த அணிக்கு வந்த மற்ற வீரர்கள் எல்லாம் ஒன்று பார்ம் அவுட் ஆகி போய்விடுவார்கள். சிஎஸ்கே அணியில் சிறப்பாக விளையாடி ஹீரோ அந்தஸ்தைப் பெற்ற வாட்சனே ஆர்சிபி அணியில் இருந்தபோது தடுமாறினார்.

இந்த நிலையில் இங்கிலாந்து வீரர் டாம் கரன் ஆர் சி பி அணியால் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம் பிபிஎல் கிரிக்கெட் தொடரில் டாம் கரண் தற்போது சிட்னி 6 அணிக்காக விளையாடி வருகிறார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி நடைபெற்ற ஹாபர்ட் ஹரிக்கேன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்பு டாம் கரண் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு ஆடுகளத்தில் நடுவே சென்று பார்க்க கேப்டன் மற்றும் பயிற்சியாளர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. இந்த நிலையில் இதனை மீறி டாம் கரண் ஆடுகளத்திற்கு நடுவே ஓடி சென்று பயிற்சியில் ஈடுபட்டார். இதனை பார்த்த நடுவர் பிட்சிக்கு நடுவே ஓடக்கூடாது என்றும் வெளியே வேண்டுமானால் பயிற்சி செய்யுங்கள் என்று கூறினார்.
ஆனால் அதையும் மீறி மீண்டும் டாம் கரன் பிட்ச்க்கு நடுவே பயிற்சி செய்தார். இதனால் கடுப்பான நடுவர், டாம் காரனை மறைக்கும் விதமாக ஸ்டெம்ப் அருகே வந்து நின்றார். ஆனால் டாம் கரன் அவரை மோதும் விதமாக ஓடி வந்து அங்கிருந்து நகர்ந்து சென்று நடுவரை வெறுப்பேற்றினார். இது தொடர்பாக நடுவர் அளித்த புகாரின் அடிப்படையில் டாம் கரணுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தடையை எதிர்த்து சிட்னி சிக்ஸஸர் அணி நிர்வாகம் மேல் முறையீடு செய்திருக்கிறது. இந்த நிலையில் டான் கரன் நடுவரிடம் வம்பு இழுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஒரு வீரர் நடுவரை மதிக்க கூட தெரியாமல் இவ்வளவு கீழ்த்தனமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.