பெங்களூர் : ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி இந்தியா திரும்பியுள்ளார்.
17வது சீசனுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. மார்ச் 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து ஆர்சிபி அணி களமிறங்கவுள்ளது. 15 ஆண்டுகளாக ஆர்சிபி அணி சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு போட்டியில் கூட வென்றதில்லை. இதனை மாற்ற ஆர்சிபி அணி தீவிரமாக உள்ளது.

இதற்காக ஆர்சிபி அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். புதிய பயிற்சியாளர் ஆண்டி பிளவர் மற்றும் கேப்டன் டூ பிளஸிஸ் தலைமையில் ஆர்சிபி அணியின் பயிற்சி முகாம் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஆர்சிபி அணியின் வணிகத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல, ஆர்சிபி அணி நிர்வாகமும் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக ஆர்சிபி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆர்சிபி அன்பாக்ஸ் நிகழ்ச்சி இன்னும் 2 நாட்களில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி பங்கேற்பாரா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ஏனென்றால் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு சில வாரங்களுக்கு முன் 2வது குழந்தை பிறந்தது.
இதற்காக ஜனவரி மாதமே விராட் கோலி லண்டன் பறந்தார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து மகன் பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்த தம்பதியினர், அகாய் என்று பெயர் சூட்டியுள்ளதாகவும் கூறினர். இதனால் விராட் கோலி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் நேற்றிரவு நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் இருந்து மும்பை திரும்பி இருக்கிறார். இதனால் இன்று அல்லது நாளை ஆர்சிபி அணியுடன் விராட் கோலி இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஆர்சிபி ரசிகர்கள் பலரும் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ஆர்சிபி அணி தரப்பில் நடத்தப்படும் அன்பாக்ஸ் நிகழ்ச்சியில் விராட் கோலியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.