அகமதாபாத் : கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தது. ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் தலைமையில் ஆடும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமான நிலைக்கு சென்றுள்ளது.
அந்த அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. அதற்கு முக்கிய காரணம் அந்த அணி பவர் பிளே ஓவர்களில் மிக மோசமாக ரன் குவிக்கத் திணறி வருவதுதான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அணியின் துவக்க வீரர்கள் விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் படுமோசமாக ஆடி வருகிறார்கள். அதன் காரணமாகவே அந்த அணி பவர் பிளே ஓவர்களில் ரன் குவிப்பதில்லை.

நேற்று நடந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 2024 ஐபிஎல் தொடரின் மிக மோசமான பவர் பிளே ஸ்கோரை குஜராத் டைட்டன்ஸ் அணி பதிவு செய்தது. அந்தப் போட்டியில் முதல் ஆறு ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது.
இதுவே அந்த அணியின் வரலாற்றில் மிக மோசமான பவர் பிளே ஸ்கோர் ஆகும். குஜராத் அணி மேலும் இந்த ஆண்டு பவர் பிளே ஓவர்களில் மிகக் குறைந்த ரன் ரேட் வைத்துள்ள அணியாகவும் உள்ளது. அந்த அணி பவர் பிளே ஓவர்களில் சராசரியாக 7.54 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. மற்ற அணிகள் அனைத்தும் 9 அல்லது 10 ரன்கள் ரன் ரேட் வைத்துள்ள நிலையில் குஜராத் அணி மிக மோசமாக 7.54 என்ற அளவிலேயே ரன் ரேட் வைத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி மோசமாக விக்கெட்களை இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 149 ரன்கள் என்ற சிறிய இலக்கை சேஸிங் செய்த பெங்களூரு அணி 13.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.