பெங்களூர் : குஜராத் டைட்டன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
பேட்டிங்கில் மோசமாக சொதப்பிய குஜராத் அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தப் போட்டியில் குஜராத் அணியின் மோசமான விக்கெட் சரிவை துவக்கி வைத்தது அந்த அணியின் துவக்க வீரர் விருத்திமான் சாஹா தான். அவர் இந்த போட்டியின் முதல் ஓவரில் நான்கு பந்துகளை சந்தித்து ஒரு ரன் மட்டுமே எடுத்தார். அடுத்து சிராஜ் வீசிய இரண்டாவது ஓவரில் மூன்று பந்துகளை சந்தித்தார். மூன்றாவது பந்தில் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார் சாஹா.

டெஸ்ட் போட்டி போல ஆடிய அவர் 7 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தார். இதை அடுத்து குஜராத் அணி நிதான ஆட்டம் துவங்கி ரன் ரேட் அழுத்தத்தில் சிக்கியது. அதன் பின் வரிசையாக விக்கெட்களை இழந்து 20 ஓவர்கள் கூட முழுமையாக தாக்குப் பிடிக்க முடியாமல் 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.
விருத்திமான் சாஹா துவக்க வீரராக இந்த ஆண்டு முழுவதும் மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது அந்த மோசமான பேட்டிங்கின் காரணமாகவே குஜராத் அணி ஒவ்வொரு போட்டியிலும் பவர் பிளேவில் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் திணறி இருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் பேட்டிங் செய்துள்ள சாஹா, அதில் 136 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 15 மட்டுமே. அவரது ஸ்ட்ரைக் ரேட் 118. மேலும் இந்த ஒன்பது போட்டிகளில் ஒரு முறை மட்டுமே பவர் பிளே முழுவதும் தாக்குப்பிடித்து பேட்டிங் செய்துள்ளார். மற்ற எட்டு போட்டிகளிலும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளேயே தனது விக்கெட்டை இழந்து இருக்கிறார்.
இந்த மோசமான பேட்டிங்கால் குஜராத் அணியின் வீழ்ச்சிக்கு இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக இந்தப் போட்டியில் சாஹாவின் பலவீனத்தை சரியாக கணித்த பெங்களூரு அணி முகமது சிராஜை அவருக்கு எதிராக பந்து வீச வைத்து விக்கெட்டை வீழ்த்தியது. சிராஜ்க்கு எதிராக இதுவரை ஆறு முறை பேட்டிங் செய்துள்ள சாஹா அதில் நான்கு முறை விக்கெட்டை இழந்துள்ளார்.
இதை சரியாக பயன்படுத்திய பெங்களூர் அணி சிராஜை வைத்து சாஹா விக்கெட்டை வீழ்த்தியது. அதன் பின் சுப்மன் கில் 2 ரன்களிலும், சாய் சுதர்சன் 6 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த வீரர்கள் ஓரளவு ரன் சேர்த்தாலும் அதிரடியாக ஆட முடியாமல் திணறினர்.